"பர்மிஷன் வாங்கிட்டுதான்.. மறுமணம் பண்ணிக்கணும்!" அரசு ஊழியர்களுக்கு பீகார் அரசின் சர்ச்சை உத்தரவு
பாட்னா: அரசு ஊழியர்களுக்குப் பீகார் அரசு பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்று இப்போது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
பீகார் மாநிலத்தில் இப்போது நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி 75 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை.

பீகார்
பாஜக 75 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வென்று இருந்தது. இதையடுத்து பாஜக-ஜேடியு கூட்டணி ஆட்சி அமைந்தது. அதிக இடங்களைக் கொண்டு இருப்பதால் முதலில் பாஜகவைச் சேர்ந்தவருக்கே முதல்வர் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நிதீஷ்குாமரே ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருப்பார் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது.

மறுமணம்
முதலில் கூட்டணியில் எவ்வித சர்ச்சையும் இல்லாமலேயே இருந்தது. இருப்பினும், சமீப காலமாகவே இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தச் சூழலில், அரசு ஊழியர்கள் மறுமணம் செய்து கொள்வது குறித்து பீகார் அரசு வெளியிட்டுள்ள உத்தரவு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

சர்ச்சை உத்தரவு
அதாவது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பும் பீகார் அரசு ஊழியர்கள், அவர்கள் பணிபுரியும் துறைகளில் இருந்து உரிய அனுமதியைப் பெற வேண்டும் என்றும் உரிய அனுமதி கிடைத்த பின்னரே மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளும் திருமண நிலை குறித்துத் தெரிவித்து, தேவையான அனுமதி பெற்ற பின்னரே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.

இரண்டாவது திருமணம்
இரண்டாவது திருமணம் செய்யத் திட்டமிடும் எந்தவொரு ஊழியரும் தனது முதல் துணையிடம் இருந்து சட்டப்பூர்வமாகப் பிரிய வேண்டும் என்றும் இதைச் சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அரசு ஊழியரின் முதல் மனைவி அல்லது கணவன் எதிர்த்தால், இரண்டாவது திருமணத்திற்கு அனுமதி மறுக்கப்படும். முறைகேடாக இரண்டாம் திருமணம் செய்வதைத் தடுக்கவே இதுபோன்ற சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனுமதி தேவை
உரிய அனுமதி இல்லாமல் அரசு ஊழியர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து, பணியின் போது உயிரிழந்தால், அவரது இரண்டாவது துணையின் குழந்தைகளுக்குக் கருணை அடிப்படையில் வேலை கிடைக்காது. முதல் மனைவியின் குழந்தைகளுக்கே மாநில அரசு முன்னுரிமை அளிக்கும். பீகார் அரசின் ஆணையர்கள், மாவட்ட நீதிபதிகள், காவல்துறை என அனைவருக்கும் இந்த உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications