9000 பேர் கொரோனாவுக்கு பலி.. இறந்தவர் கணக்கை திருத்திய பீகார்.. 2வது அலையில் மட்டும் 8000 பேர்!
பீகாரில் கொரோனா மரணங்கள் 9 ஆயிரத்தை கடந்தது
பாட்னா: பீகாரில் 9,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இதுவரை உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது.. அதிலும் 2வது அலையில் மட்டுமே 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் பீகாரும் ஒன்றாக இருந்தது..
அதாவது டபுளிங் ரேட் எனப்படும் இரட்டிப்பு வேகம் இந்த மாநிலத்திலும் அதிகரித்தது. இந்த 2வது அலை பரவல் பீகாரில் பெருமளவு பாதிப்பை தந்துவிட்டது.

தளர்வுகள்
எனவே, 2-ம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.. இதனால், நாளுக்கு நாள் தொற்று மெல்ல குறைய ஆரம்பித்தது.. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அங்கு அமலில் உள்ளது. தொற்று அதிகம் இருந்தபோதும் கூட மரண எண்ணிக்கையை குறைத்தே அரசு கணக்கு காட்டி வந்தது. சில நாட்களுக்கு முன்பு வரை மொத்தமே 5500க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் பலி எண்ணிக்கை இருந்து வந்தது.

நோயாளிகள்
ஆனால் தற்போது கிட்டத்தட்ட 4000 பேரை கூடுதலாக மரண எண்ணிக்கையில் சேர்த்துள்ளது அரசு. தற்போது, கொரோனா தொற்று நோயாளிகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9,429 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநில சுகாதார துறையினரின் சரிபார்ப்பிற்குப் பிறகு, இறந்தவர்களின் எண்ணிக்கையில் 3,951 இறப்புகள் அதிகமாகி உள்ளது தெரியவந்துள்ளது.

மரணங்கள்
இத்தனைக்கும் அங்குள்ள முக்கிய மாவட்டங்களுக்கு லாக்டவுன் போட்டும் இந்த கூடுதல் மரணங்கள் எப்போது நிகழ்ந்தன என்பது தெரியவில்லை. ஆனால், 2வது அலை பரவலில்தான் அதிக அளவு கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.. 8000த்துக்கும் மேற்பட்டோர் இந்த 2வது அலை பரவலில் இறந்துள்ளனர்.. அதாவது ஏப்ரல் மாதம் முதல், இந்த இறப்புகளின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

தொற்று
பாட்னா மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 2,303 பேர் இறந்துள்ளனர்.. முசாபர்பூரில் 609 பேர், பெகுசராய் பகுதியில் 316, முசாபர்பூர் 314 பேர், கிழக்கு சம்பரன் 391 பேர், நாலந்தாவில் 222 பேரும் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்த மாநிலத்தில் இதுவரை மொத்தம் 7,15,179 பேர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதில் 5 லட்சத்துக்கும் மேலானவர்கள் கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்...

லாக்டவுன்
அதேபோல, 98.70 சதவீதமாக இருந்த மீட்பு வீதமும் 97.65 சதவீதமாக குறைந்துள்ளது... ஆனால், அரசாங்கம் நிஜமான புள்ளி விரங்களை மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்ட ஆரம்பித்துள்ளன.. என்றாலும், இந்த ஒருமாசத்தில் லாக்டவுன் போடப்பட் பிறகு, இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிருப்தி
பீகார் அரசு மரண எண்ணிக்கையைத் திருத்தியதற்கு முக்கியக் காரணமே பாட்னா ஹைகோர்ட் அளித்த உத்தரவுதான். அதாவது கொரோனா பலி எண்ணிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த ஹைகோர்ட், முறையாக கணக்கெடுப்பு நடத்தி சரியான பலி எண்ணிக்கையை சுகாதாரத் துறை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அதிக பலி
இதையடுத்தே சுகாதாரத் துறை சரியான எண்ணிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது உண்மையைக் கூறியுள்ளது. இல்லாவிட்டால் மேலும் மேலும் பொய்க் கணக்கையே அந்த மாநில அரசு காட்டிக் கொண்டிருந்திருக்கும். தற்போதைய மரண எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் முதலில் சொன்ன பலி எண்ணிக்கையை விட 73 சதவீதம் அதிக பலிகள் கணக்கில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications