திட்டம் என்னவோ பெண்களுக்குதான்! ஆண்கள் அக்கவுண்டுக்கு போன ரூ.10000! மீட்க போராடும் பீகார் அதிகாரிகள்
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், அம்மாநில அரசு பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்தின் கீழ் சில ஆண்களின் அக்கவுண்ட்டுக்கு இந்த தொகை சென்றிருக்கிறது. தொகையை திருப்பி தருமாறு தற்போது அரசு நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. ஆனால், இதை வாங்கியவர்கள் திருப்பி கொடுக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, செப்டம்பர் 26 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், சுமார் 1.4 கோடி பெண் தொழில்முனைவோரின் வங்கிக் கணக்குகளுக்குத் தலா ரூ. 10,000 அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஜலே சட்டமன்றத் தொகுதியில் உள்ள அஹியாரி கிராமத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில ஆண்களின் கணக்குகளுக்கு இந்தத் தொகை தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து வட்டார திட்ட இயக்குநர், கிராமத்தில் உள்ள நாகேந்திர ராம், பல்ராம் சஹ்னி, மற்றும் ராம் சாகர் குமார் என மூன்று ஆண்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் ஆவர்.
கிராமவாசி நாகேந்திர ராம் தனது நிலை குறித்துப் பேசுகையில், "நான் இந்தப் பணத்திற்காக விண்ணப்பிக்கவில்லை. அரசுதான் ரூ. 10,000 தொகையை எனது கணக்குக்கு அனுப்பியது. நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால், சத் பூஜை மற்றும் தீபாவளியின்போது அதைச் செலவழித்தேன். மற்ற சிலர் ஆடுகள், வாத்துகள் வாங்கினார்கள். இப்போது பணத்தைத் திரும்பத் தரச் சொல்லி நோட்டீஸ் வருகிறது. என்னால் எங்கிருந்து பணம் கொண்டு வர முடியும்? முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பிற அதிகாரிகள் எங்களை மன்னித்து இந்தத் தொகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த தொழில்நுட்ப குழப்பம் குறித்து, பீகார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷர்வன் குமார் கூறுகையில், "இதுபோன்ற நிதிப் பரிமாற்றங்கள் குறித்து முழுமையான அறிக்கையை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளேன். இது கவலைக்குரிய விஷயம்" என்று கூறியுள்ளார்.
பணத்தை பெற்றவர்களில் சிலர், தங்கள் வாக்கை திருப்பி தர வேண்டும் அப்போது பணத்தை கொடுப்பதாக கூறியிருக்கின்றனர். இதனால் பணத்தை திருப்பி பெற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். பணத்தை பெற்ற ஆண்கள் தினமும் ரூ.300 மட்டுமே சம்பாதிக்கும் கூலி தொழிலாளியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் எங்களால் எப்படி ரூ.10,000 தர முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக மக்களுக்கு அவசர அவசரமாக பணம் அனுப்பப்பட்டது என்றும், அந்த அவசரத்தில் யார் பெண்கள்? யார் ஆண்கள் என்று தெரியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த தவறுக்கு என்டிஏ கூட்டணி அரசுதான் முழு பொறுப்பு என்றும் விமர்சித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications