பீகார்: நேற்று, இன்று, நாளை.. மகாஜனபதங்கள் ஆட்சியும், அரசியல் தொடக்கமும்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை 'ஒன் இந்தியா தமிழ்' தொகுத்து வழங்கி வருகிறது. இன்று பீகாரில் மகாஜனபதங்கள் தோன்றியது குறித்தும் அதன் விரிவாக்கம் குறித்தும் இந்த கட்டுரை விரிவாக பேசும்.
கடந்த பாகத்தில் பீகாரில் மனித சமூகத்தின் வளர்ச்சி எப்படி இருந்தது என்பது பற்றி பார்த்தோம். இந்த மனிதர்கள் பழங்குடியினர்களாக ஆங்காங்கே பிரிந்து வாழ்ந்து வந்திருந்தனர்.

பீகாரில் வேளாண் வளர்ச்சி
அதன் பின்னர் வேளாண் தொழில் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒருங்கிணைக்க தொடங்கியது. ஆனாலும் கூட மனிதர்கள் இன்னும் முழுமையாக கூட்டு சேரவில்லை. ஒரு கட்டத்தில் அதாவது கி.மு.800ம் ஆண்டுகளில் இங்கு வாழ்ந்த மனிதர்கள் இரும்பை உபயோகப்படுத்த தொடங்குகிறார்கள். இரும்பு பயன்பாடுதான் மக்களை முழுமையான ஒருங்கிணைத்தது. கங்கை நதி, ஆண்டுதோறும் விவசாயத்திற்கு போதுமான நீரை கொண்டு வந்தது.
பீகாரில் இரும்பு பயன்பாடு
வேளாண் தொழில் பெரிய அளவுக்கு வளர்ந்தபோது, மக்களின் மற்ற தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்கான நேரம் கிடைத்தது. எனவே மக்கள் இரும்பை முழுமையாக பயன்படுத்த தொடங்கினர். இது பீகார் வளர்ச்சியின் முக்கியமான காலகட்டமாகும். குறிப்பாக கோடரிகளும், மண்வெட்டிக்களும் ஒரு மேஜிக்கை நடத்திய காட்டின. கோடாரிகளை கொண்டு காடுகள் அழிக்கப்பட்டு புதிய வசிப்பிடங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல மண்வெட்டி உள்ளிட்ட பொருட்கள் வேளாண் தொழிலின் வேகத்தை அதிகரித்தன.
மகாஜனபதங்கள் என்றால் என்ன?
இதெல்லாம் நடந்தது மகாஜனபதங்கள் ஆட்சியில்தான். ஜனம் என்றால் மக்கள். பதம் என்றால் நிலம். பெரிய அளவில் மக்கள் வாழும் இடத்தைதான் மகாஜனபதங்கள் என்று சொல்லவார்கள். இந்த பகுதியை மகதப் பேரரசு கைப்பற்றியது. இப்படியாக கி.மு.6ம் நூற்றாண்டில் பாடலிபுத்ரா, ராஜ்கிரிஹா உள்ளிட்ட நகரங்கள் உருவாகின.
பீகாரில் மன்னராட்சி
மனித நாகரிகம் உருவானபோது, அது வேட்டை சமூகமாக இருந்தபோது எல்லோருக்கும் எல்லாம் சமம் என்றுதானே இருந்தது. இடையில் எப்படி மன்னராட்சி வந்தது என கேள்வி எழலாம். இதற்கு காரணம் சொத்துடமைதான். பீகார் மட்டுமல்ல, உலகின் எல்லா நாகரிகங்களும் சொத்துடமை காலத்தில்தான் மன்னராட்சிக்குள் நுழைந்தது.
பீகாரிலும் அதுதான் நடந்தது. தேவைக்கு பிறகு உற்பத்தியாகும் நெல் உபரியாக இருந்தது. உபரி சொத்தாக மாறியது. சொத்தை காப்பாற்ற வேண்டுமே! எனவே 'நான், என்னுடைய சொத்து, என் குடும்பம், என் குடும்பத்தின் சொத்து' என்கிற கருத்தியல் உருவானது. இந்த புள்ளியில்தான் பீகாரில் 'இருப்பவர்கள்' ஒருபுறமும், 'இல்லாதவர்கள்' ஒருபுறமும் பிரிக்கப்பட்டனர். ஒரு வகையில் இதை அபகரிப்பு என்றும், களவானித்தனம் என்றும் சொல்லலாம்.
பீகாரில் சொத்துடமை
இது காலங்காலமாக நடக்க, ஏமாற்றி, பிறரின் உழைப்பை சுரண்டி சொத்தை சேர்த்தவர்கள் ஆட்சியாளர்களாக மாறினார்கள். அவர்கள் அரசர்களாகவும், அரசர்கள் நகரங்களையும் வணிகத்தையும், நாணயங்களையும் உருவாக்கினார்கள். அப்படி உருவானதுதான் பாடலிபுத்ரா, ராஜ்கிரிஹா. பாட்லிபுத்ராதான் இன்றைய பாட்னா. வணிகம் உலகின் பிற நாடுகளுடன் பீகாரை தொடர்புகொள்ள செய்தது. இந்த புள்ளியிலிருந்து நவீன பீகார் உருவாக தொடங்கியது. இதெல்லாம் நடந்தது மகதப் பேரரசு ஆட்சி காலத்தில்தான்.
வணிகத்தை நவீனமயமாக்குதல், சொத்துக்களை காக்க பாதுகாப்பு, இதையெல்லாம் செய்ய அதிகாரம், அதிகாரத்தை செலுத்த ஆட்சியாளர்கள், ஆட்சியை பாதுகாக்க மதங்கள், ஆட்சியை தொடர வம்சங்கள், பின்னர் மதங்களுக்குள் மோதல் என பீகார் வரலாறு சூடுபிடித்து வளர்ந்தது. இதை அடுத்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications