ஓய்வு பெறும் எண்ணம் இல்லை... கடைசி தேர்தல் என்று சொல்லவில்லை - நிதிஷ் குமார்
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று பீகார் மாநில முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பாட்னா: இதுதான் எனது கடைசி தேர்தல் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை என்று ஜேடியு தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார் கூறியுள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
243 இடங்களை கொண்ட பீகார் மாநில சட்டசபையில்,பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. எதிர் அணியான மெகா கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றது.

75 இடங்களில் வெற்றி பெற்று, மகா கூட்டணியின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. 74 இடங்களுடன் பாஜக இரண்டாவது இடத்தை பிடித்தது. அதன் கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த எச்.ஏ.எம்.எஸ். கட்சியும், வி.ஐ.பி. கட்சியும் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான 122 இடங்களை விட அதிகம் பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட பாஜக அதிக இடங்களை வென்றிருந்தாலும் நிதிஷ்குமார்தான் முதல்வர் என்று அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. தேர்தலுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், பீகார் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். இந்த கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.
முதல்வர் பதவிக்கு நான் உரிமை கோரவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் தான் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும். பதவியேற்பு விழா தீபாவளிக்கு பிறகு நடைபெறலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகே இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
அரசியல் ஓய்வு என்ற வார்த்தைக்கே இடமில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றுதான் கூறினேன். ஓய்வு பெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும் கூறியுள்ளார் நிதிஷ்குமார்.
நிதிஷ் குமார் கடந்த நவம்பர் 5ஆம் தேதி, பூர்னியா தொகுதியில் பிரச்சாரத்தின் போது, "இதுதான் எனது கடைசி தேர்தல் பிரசார தினம். இதுதான் எனது கடைசி தேர்தல். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறியதாக செய்திகள் வெளியானது.
இந்த பேச்சு வெளியான உடனேயே இது மக்களை உணர்ச்சி பூர்வமாக ஈர்க்கப் பார்க்கிறார் என்று பலரும் கருத்து கூறினர். தேர்தல் முடிவுகள் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர் பேட்டியளித்த நிதிஷ்குமார் ஓய்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications