கொரோனாவின் கோரதாண்டவம்.. பீகாரில் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய சடலங்கள்.. உ.பி-இல் வீசப்பட்ட அவலம்
பாட்னா: கொரோனாவின் கோரத்தாண்டவத்தை விளக்கும் வகையில், பீகாரிலுள்ள ஒரு நகரில் கங்கை நதிக்கரையில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பின் 2ஆம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு கடந்த சில தினங்களாகவே மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை.
லாக்டவுன்...குடிமகன்கள் மூர்க்கத்தனமாக முற்றுகை...2-வது நாளாக டாஸ்மாக் மதுகடைகள் விற்பனை ரூ.428 கோடி
மறைக்கப்படும் உயிரிழப்புகள்
இந்தியாவில் தினசரி உயிரிழப்புகளும் மூவாயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 2.46 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பல நூறு கொரோனா உயிரிழப்புகள் தினசரி கொரோனா அல்லாத மரணங்களாக மறைக்கப்படுவதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். இந்திய மருத்துவ சங்கம் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையிலும் இதையே குறிப்பிட்டிருந்தனர்.
கரையொதுங்கிய சடலங்கள்
கொரோனாவால் இந்திய எந்தளவுக்கு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் வகையில் பீகாரில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேசம் - பீகார் எல்லையில் சவுசா என்ற நகரம் அமைந்துள்ளது. இன்று காலை இங்குள்ள கங்கை நதிக்கரையில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் சிதைந்து, அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம்
அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அம்மாநில அரசு கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைத்துக் காட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களாக இவை இருக்கலாம் என்றும் அங்குத் தகனம் செய்ய போதிய இடமில்லாததால் இப்படி கங்கை நதியில் வீசியிருக்கலாம் என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணை தேவை
தற்போது 45 சடங்கள் கரை ஒதுங்கியிருப்பதாகவும் ஆனால் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் உத்தரப் பிரதேசத்தில் இப்படி ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவை நீரிலேயே சுமார் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்திருக்கும். அதனால் அனைத்து சடலங்கள் வீங்கியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் எந்த கிராமத்தில் இப்படி உடல்கள் வீசப்படுகின்றன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இங்குள்ள மக்கள் இதனால் கொரோனா பரவுமோ என அஞ்சுகின்றனர். இதனால் சடலங்களைப் புதைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.