இந்தியா கூட்டணிக்கு போடும் ஓட்டு எல்லாமே “வேஸ்ட்”.. பீகாரில் மோடி பிரச்சாரம்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பவர்களின் வாக்குகள் வீணாகப் போவது உறுதி எனக் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று பீகாரில் உள்ள 5 லோக்சபா தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பீகாரில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் முதன்மையான அணிகளாக உள்ளன.

ராஷ்டிரீய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் அணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐ எம்.எல் கட்சி 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று பீகார் மாநிலத்துக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள குருத்வாராவில் சப்பாத்தி செய்து, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார். அப்போது சர்தார்ஜி போன்ற உடையில் இருந்தார் பிரதமர் மோடி.
சீக்கியர்களின் புகழ்பெற்ற புனிதத் தலம் ஸ்ரீ தக்த் ஹர்மந்திர் பாட்னா சாஹிப் குருத்வாரா. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு 10வது சீக்கிய குரு பிறந்த இடத்தில் பாட்னா சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. குரு கோவிந்த் சிங்கின் பிறப்பிடத்தைக் குறிக்கும் வகையில் 19 ஆம் நூற்றாண்டில் மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரால் இந்த குருத்வாரா அமைக்கப்பட்டது.
பாட்னா சாகிப் குருத்வாராவில், சீக்கியர்களுக்கு பிரதமர் மோடி உணவு பரிமாறினார். காலை உணவு தயார் செய்யும் சமையல் அறைக்கு சென்று, பிரதமர் மோடி சப்பாத்தி தயார் செய்தார். தொடர்ந்து, காலை உணவை சீக்கியர்களுக்கு பரிமாறினார்.
அதைத்தொடர்ந்து ஹாஜிப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பீகாரை முன்னோக்கி கொண்டு செல்ல ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுக்கு விருப்பம் இல்லை. அவர்கள் உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களின் வாரிசுகளைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறார்கள்.
ஆர்ஜேடி, காங்கிரஸின் முன்னுரிமை மக்கள் நீங்கள் அல்ல, அவர்களின் சொந்த வாக்கு வங்கிதான் அவர்களுக்கு முக்கியம். முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை பறிக்க விரும்புகிறார்கள்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர், பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்கியவர், முஸ்லீம்களுக்கு முழுமையாக இடஒதுக்கீடு வழங்க வாதிடுகிறார். அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.
யாராவது தவறுதலாக ஆர்.ஜே.டி, காங்கிரஸ் அல்லது இந்தியா கூட்டணிக்கான பட்டனை அழுத்தினால், அவருடைய வாக்கு வீணாகப் போவது உறுதி. பீகார் மக்கள் புத்திசாலிகள். எனவே வலுவான ஆட்சி அமைக்க உங்கள் வாக்கை அளியுங்கள், வளமான நாட்டைக் கட்டமைக்க உங்கள் வாக்கை அளியுங்கள். உங்களின் எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்.” எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications