பரபரப்பில் இந்தியா கூட்டணி.. பாஜக பக்கம் தாவுகிறாரா? நிதிஷ் குமார் இதுவரை அடித்த அரசியல் பல்டிகள்
பாட்னா: "இந்தியா" கூட்டணியை உதறி தள்ளிவிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே மீண்டும் இணைய நிதிஷ் குமார் முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமார் கடந்த காலங்களில் தனது அரசியல் நிலைப்பாட்டை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறார் என்பது குறித்து பார்க்கலாம்.
பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிட்டது. பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் லாலுவின் ஆர்ஜேடி கட்சி 75 இடங்களிலும் பாஜக 74 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றது. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல்வரானார்.

ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ் குமார் முறித்துக் கொண்டார். முதல்வர் பதவியில் இருந்து விலகி உடனடியாக ஆர்ஜேடி, ஜேடியூ, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இணைந்து மீண்டும் மகா கூட்டணியை அமைத்த நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு பாஜகவை மிகக் கடுமையாக நிதிஷ் குமார் விமர்சித்தார். நிதிஷ்குமாருக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும் இனி பாஜக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்றும் பீகார் பாஜக தலைவர்கள் விமர்சித்தனர்.
இதற்கிடையே, லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு நிதிஷ் குமாருக்கு உண்டு. எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதன் முதலில் பாட்னாவில்தான் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் என சுமார் 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தன.
ஆனால் தற்போது தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்தது. இது பீகார் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததால், பாஜகவையும் பிரதமர் மோடியையும் நிதிஷ் குமார் பாராட்டி பேசினார்.
அதோடு லாலு பிராசத் யாதவை விமர்சித்தார். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜக பக்கம் தாவ திட்டமிட்டு வருவதாக பீகாரில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் வெல வெலத்து போயுள்ளன. பீகார் மாநில சட்டசபையை கலைப்பது தொடர்பாக நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன் "இந்தியா" கூட்டணியை உதறி தள்ளிவிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே மீண்டும் இணையவும் நிதிஷ் குமார் முடிவெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பீகார் மாநில பாஜக தலைவர்கள் இன்று அமித்ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இப்படி பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நிதிஷ்குமார் கடந்த காலங்களில் தனது அரசியல் நிலைப்பாட்டை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறார் என்பது குறித்து பார்க்கலாம்.
பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 2013ல் முதல் முறையாக உடைந்தது. அதற்கு முன்பாக இரு கட்சிகளும் நீண்ட காலம் கூட்டணி அமைத்திருந்தன. அப்போது பாஜக வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் தலைமையின் கீழ் இருந்தது. அந்த சமயத்தில் நிதிஷ் குமாருக்கு சுதந்திரமாக செயல்படும் உரிமை இருந்தது. இதற்கு பதிலாக மத்தியில் பாஜகவுக்கு நிதிஷ்குமார் ஆதரவாக இருந்தார்.
ஆனால், 2013 ஆம் ஆண்டி சூழல் அப்படியே மாறியது. நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு நிதிஷ் குமார் கடும் அதிருப்தி தெரிவித்தார். தனது அதிருப்தியை பாஜக தலைமையிடமும் அழுத்தமாக கூறினார். ஆனால் பாஜக மோடியை அறிவித்ததில் இருந்து பின்வாங்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்தது. இதானல், நிதிஷ் குமார் பாஜகவுடனான 17 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார்.
2014 லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் படு தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். ஜித்தன் ராம் மஞ்சியை முதல்வராக முன்னிறுத்தினார். அப்போது நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் முறியடித்தது. அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மகா கூட்டணியை அமைத்த நிதிஷ்குமார் தேர்தலில் அபார வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார்.
எனினும், இந்தக் கூட்டத்தில் ஆர்.ஜே.டி அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் கூட்டணியில் பெரியண்ணன் போல லாலு பிரசாத் யாதவ் செயல்பட்டார். தனது மகன் தேஜஸ்வி யாதவையும் அரசியலில் லைம்லைட்டிற்கு கொண்டு வந்தார். 26 வயதே ஆன தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் அடுத்த 2 ஆண்டுகளில் மகா பந்தன் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
அதாவது, மோடி அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றிற்கு ஆதராவக பேசினார். நிதிஷ் குமாரின் இந்த மூவ் எதிர்க்கட்சிகளுக்கு வியப்பை கொடுத்தது. மேலும் லாலு பிரசாத யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இதனால், கூட்டணியில் லாலுபிரசாத் யாதவுடன் கூட்டணியில் இருக்கும் தனது இமேஜிற்கும் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவை பதவி விலக சொன்னார். ஆனால், இதற்கு லாலு பிரசாத யாதவ் ஒப்புகொள்ளவில்லை. இதனால், முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் , கூட்டணி அரசை கலைத்தார். உடனடியாக பாஜக ஆதரவுடன் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து தேர்தலை நிதிஷ்குமார் எதிர்கொண்டார். இந்த தேர்தலிலும் நிதிஷ் கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வென்றது. கூட்டணியில் பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ்குமாரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
இதனால், 2022ல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பிளவுபடுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய நிதிஷ் குமார், ஆகஸ்ட் 9,2022 அன்று பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தார். மறுநாளே ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து முதல்வரானார். இப்படி அடிக்கடி கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து யூடேர்ன் போட்டு வரும் நிதிஷ் குமார் தற்போது மீண்டும் பாஜக பக்கம் சாயலம் என அரசியல் வட்டாரத்தில் பர்பரப்பான பேச்சு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications