Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2005 சம்பவம் மீண்டும் நடக்குமா! நிதிஷ்குமாரை பழிதீர்ப்பாரா தேஜஸ்வி! பீகார் களம் எப்படி இருக்கு?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி 20 ஆண்டு காலம் பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார் தொடர்கிறார். அதற்கு முன்னர் முதல்வராக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ராப்ரி தேவியை தோற்கடித்துதான் நிதிஷ்குமார் வெற்றி பெற்றார். அன்று தொடங்கி இன்று வரை நிதிஷை வீழத்த துடித்துக்கொண்டிருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு இந்த தேர்தல் ஒரு பொன்னான வாய்ப்பு. இதை லாலு-ராப்ரி தேவி மகன் தேஜஸ்வி யாதவ் பயன்படுத்திக்கொள்வரா?

பீகாரில் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தல் கடந்த 1952ல் நடைபெற்றது. அப்போது ஜார்க்கண்ட் பீகாரின் ஒரு பகுதியாக இருந்ததால், மொத்தம் 330 தொகுதிகளில் போட்டி நிலவியது. தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 'ஸ்ரீ பாபு' என அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ண சிங், பீகாரின் முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

Tejashwi Yadav Nitish Kumar Bihar

தேர்தல் எனும் ஜனநாயக திருவிழா

சுமார் 1.8 கோடி வாக்காளர்களில், ஒரு கோடி பேர் வாக்களித்தனர். அதாவது, சுமார் 55% வாக்குகள் பதிவாகின. மாட்டு வண்டிகளில் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. கிராமம் முழுவதும் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். தேர்தல் ஒரு திருவிழா என மக்கள் அப்போதுதான் முதன்முறையாக உணர்ந்துக்கொண்டனர். தேர்தலில் 13 கட்சிகள் களமிறங்கினாலும், காங்கிரஸ் எழுச்சியில் மற்றவை காணாமல் போயின.

1967 முதல் 1985 வரை பீகார் அரசியல் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டது. 1967இல் காங்கிரஸ் 318 இடங்களில் 128 இடங்களைப் பெற்றது. அதேசமயம், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி 199இல் 68 இடங்களையும், ஜன கிராந்தி தளம் 60இல் 13 இடங்களையும் வென்றன. இந்தத் தேர்தலுக்குப் பிறகு குறுகிய காலத்திற்கு நான்கு முதலமைச்சர்கள் பதவி வகித்தனர். அதே தேர்தலில், ஜனசங் 271 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் எழுச்சி

1969இல் காங்கிரஸ் மீண்டும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மை பெறவில்லை. 318 இடங்களில் காங்கிரஸ் 118, ஜனசங் 34, சோஷலிஸ்ட் கட்சி 52 மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி 25 இடங்களைப் பெற்றன. இந்தக் காலகட்டத்திலும் குடியரசுத் தலைவர் ஆட்சி மற்றும் தரோகா பிரசாத் ராய், கற்பூரி தாக்கூர், போலா பாஸ்வான் சாஸ்திரி போன்ற குறுகிய கால முதலமைச்சர்கள் பதவி வகித்தனர். 1972இல் காங்கிரஸ் 259 இடங்களில் 167 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. எதிர்க்கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. இருப்பினும் சிலகாலம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கேதார் பாண்டே, அப்துல் கஃபூர், மற்றும் ஜகந்நாத் மிஸ்ரா முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

ஜனதா கட்சியின் அலை

அதன்பிறகு, 1977இல் ஜனதா கட்சியின் அலை வீசியது. 311 இடங்களில் இக்கட்சி 214 இடங்களை வென்றது. காங்கிரஸ் வெறும் 57 இடங்களில் சுருங்கியது. கற்பூரி தாக்கூர் மற்றும் ராம்சுந்தர் தாஸ் இந்தக் காலகட்டத்தில் முதலமைச்சர் பதவியை வகித்தனர். 1980இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற்று 311 இடங்களில் 169 இடங்களை வென்றது. அதன்பின்னர், மூன்று ஆண்டுகள் ஜகந்நாத் மிஸ்ராவும், பின்னர் சந்திரசேகர் சிங்கும் முதலமைச்சர்களாக இருந்தனர்.

இத்துடன் காங்கிரஸின் வெற்றிப்பயணம் நின்றுவிடவில்லை. 1985இல் காங்கிரஸ் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. 323 இடங்களில் 196 இடங்களைப் பெற்றது. இக்காலகட்டத்திலும் பிந்தேஷ்வரி துபே, பகவத் ஜா ஆசாத், சத்யேந்திர நாராயண் சின்ஹா, மற்றும் மீண்டும் ஜகந்நாத் மிஸ்ரா முதலமைச்சர்களாகப் பதவி வகித்தனர். 1990இல் ஜனதா தளம் முதன்முறையாகக் களமிறங்கி 276 இடங்களில் 122 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. காங்கிரஸுக்கு 71 இடங்களும், பாஜகவுக்கு 39 இடங்களும் கிடைத்தன. இத்தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராகப் பதவியேற்று நீண்ட காலம் ஆட்சி செய்தார். இத்தேர்தலுடன் பீகாரில் அடிக்கடி முதலமைச்சர்கள் மாறும் நிலை முடிவுக்கு வந்தது.

லாலு பிரசாத்தின் ஆதிக்கம்

1990களில் லாலு யாதவ் ஆதிக்கம் செலுத்தினார். அவர் தனது மனைவி ராப்ரி தேவியிடம் முதலமைச்சர் பதவியை ஒப்படைத்தார். ஆனால் 2003இல் சூழ்நிலைகள் மாறின. சரத் யாதவ் குழு, லோக் ஜனசக்தி கட்சி மற்றும் நிதிஷ்-ஜார்ஜின் சமதா கட்சி இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உருவாக்கின. இந்தக் கட்சி லாலுவின் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்தது.

2000ம் ஆண்டில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. 2000ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது, ஜார்க்கண்ட் இன்னும் பீகாரின் ஒரு பகுதியாகவே இருந்தது. மொத்தம் 324 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 162 இடங்கள் ஆட்சி அமைக்க தேவைப்பட்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 293 தொகுதிகளில் போட்டியிட்டாலும், 124 இடங்களிலேயே வெற்றி பெற்றது. பாஜக 67 இடங்களையும், சமதா கட்சி 34 இடங்களையும், காங்கிரஸ் வெறும் 23 இடங்களையும் பெற்றது. அதே ஆண்டு நவம்பரில் ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது, பீகார் அரசியல் நிலப்பரப்பு மாறியது.

2005ம் ஆண்டு நடந்த மாற்றம்

2005ஆம் ஆண்டு பீகார் அரசியலில் மிகவும் சுவாரசியமானதாக அமைந்தது. பிப்ரவரியில் தேர்தல்கள் நடைபெற்றன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 215 தொகுதிகளில் போட்டியிட்டு 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 55 இடங்களையும், பாஜக 37 இடங்களையும் பெற்றது. காங்கிரஸ் வெறும் 10 இடங்களுடன் சுருங்கியது. இதன் விளைவாக, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஆனால் கதை அத்துடன் முடிவடையவில்லை. அக்டோபர்-நவம்பரில் மீண்டும் தேர்தல்கள் நடைபெற்றன. இம்முறை நிதிஷ் குமார் மற்றும் பாஜக கூட்டணி வெற்றியைப் பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 88 இடங்களையும், பாஜக 55 இடங்களையும் வென்று ஆட்சி அமைத்தது. இந்தக் காலகட்டத்தில் லாலுவின் அசைக்க முடியாத ஆட்சி வீழ்ச்சியடைந்து, நிதிஷ் குமார் எழுச்சி பெற்றார்.

2005ம் ஆண்டு தொடங்கி, இன்று வரை நிதிஷ்குமார்தான் முதலமைச்சராக இருக்கிறார். உடல் நலம் காரணமாக அரசியலிலிருந்து லாலு பிரசாத் ஓய்வ பெற்றதால், எதிர்க்கட்சிக்கான போட்டி தீவிரமாக இருக்கிறது. இதனையடுத்து தற்பொது அவர் விட்டுச் சென்ற பணியை மகன் தேஜஸ்வி யாதவ் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார். அவருக்கு பக்கபலமாக காங்கிரஸின் ராகுல் காந்தியும் துணை நின்றிருக்கிறார். 2005ல் தனது தாயிடமிருந்து ஆட்சியை பறித்த நிதிஷ்குமாரை தோற்கடித்து, ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+