முத்தலாக் தடை விவகாரம்.. கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என நிதிஷ் கட்சி புகார்
பாட்னா: மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதாவிற்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 16-வது மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டம், மாநிலங்களவையில் நிறைவேறாததால் காலாவதியானது. ராஜ்யசபாவில் பா.ஜ.க-விற்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் கடந்த காலத்தில் முத்தலாக் தடை மசோதா காலாவதியானது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியமைந்துள்ளதை அடுத்து, தற்போது மீண்டும் மக்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கலகம் விளைவிக்க விரும்பவில்லை.. அதிக இடங்களில் போட்டியிடலாமே என்றுதான் சொன்னேன்.. கே. என்.நேரு
இந்நிலையில் மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்துள்ள முத்தலாக் தடை மசோதாவிற்கு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
முத்தலாக் தடை மசோதாவானது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அல்லது சட்டமன்ற ஆய்வுக்கு நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று, ஐக்கிய ஐனதா தளம் மாநிலங்களவையில் கோரிக்கை விடுக்கும் என எதிர்கட்சிகள் எதிர்பார்கின்றன.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மக்களவையில், முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. முத்தலாக் தடை மசோதாவின் தற்போதைய வடிவத்தை தாங்கள் எதிர்ப்பதாக அக்கட்சி கூறியுள்ளது.
ஆனல் முத்தலாக் தடை மசோதா மீதான மக்களவையில் நடைபெற உள்ள வாக்கெடுப்பின் போது, பாஜகவிற்கு எதிராக, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 16 எம்பிக்கள் வாக்களிப்பார்களா என்பதை அக்கட்சி தற்போது வரை தெளிவுப்படுத்தவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலாளரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான கேசி தியாகி முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்வது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடம் விவாதித்து ஆலோசனை கேட்கப்படவில்லை என சாடியுள்ளார்.
தற்போதைய மசோதாவை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இது ஒரு நுட்பமான விஷயம் மற்றும் ஒருமித்த கருத்துக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்தையும் கேட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பேசிய தியாகி, தங்கள் கட்சி தலைவரான நிதிஷ்குமார் முத்தலாக் தடை மசோதா சட்டத்தின் மீதான எங்களது பார்வை குறித்து விளக்கமாக இந்திய சட்ட ஆணையத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டார். மக்களவையில் பா.ஜ.க.க்கு பெரும்பான்மை இருப்பதால், முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்படுவதற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் எதிர்ப்பு நிலைப்பாட்டால் பாதிப்பு இருக்காது.
ஆனால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதில் நிதிஷ்குமார் கட்சியின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். ஏனெனில் 6 ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கள் அங்கு இந்த மசோதாவை எதிர்ப்பர்.
எனவே கடந்த முறையை போலவே முதத்லாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு விடும். கடந்த கால மோடி ஆட்சியின் போதும் பரந்த அடிப்படையிலான ஆலோசனைகள் இல்லாமல் சிறுபான்மை சமூகத்தின் மீது எதுவும் திணிக்கப்படக்கூடாது என கூறி, முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் நிதிஷின் கட்சி எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.