அடிடா.. உதைடா! கலெக்டர் ஆபீசில் தகராறு.. அமைச்சரின் உதவியாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு!
பெரம்பலூர்: பெரம்பலூரில் கல் குவாரிகளுக்கான ஏலத்தின்போது கடும் தகராறு ஏற்பட்ட நிலையில், அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 30) கிரானைட் கல் குவாரி ஏலம் நடைபெற்றது. குவாரிகளை குத்தகைக்கு எடுப்பதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்குவாரி குத்தகை ஏலத்துக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என்ற நிலையில் பலர் விண்ணப்பம் தாக்கல் செய்ய வந்தனர். அப்போது ஒரு பிரிவினர் விண்ணப்பம் தாக்கல் செய்ய வந்த நிலையில் மற்றொரு பிரிவினர் அவர்களை விண்ணப்பிக்க விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மற்ற கட்சியினர் கல் குவாரி குத்தகைக்கு விண்ணப்பிப்பதை தடுத்து ஆளுங்கட்சியினர் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெரும் கூச்சல் எழுந்த நிலையில் இது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஆட்சியர் கற்பகம் அடிதடி சத்தம் கேட்டு சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தார். தகராறில் ஈடுபட்டவர்களை எச்சரித்த ஆட்சியர் அவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து நேற்று நடைபெறவிருந்த ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.
மேலும், கல் குவாரி ஏலம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை கருதி இன்று நடைபெற இருந்த கல் குவாரிகளுக்கான ஏலத்தை மாவட்ட ஆட்சியர் ஒத்தி வைத்தார்.
மேலும், பிற கட்சியினர் விண்ணப்பிப்பதை தடுத்து தகராறில் ஈடுபட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications