"இசை முரசு" நாகூர் அனிபாவின் நூற்றாண்டு விழாவில் புத்தகம் வெளியீடு!
பெரம்பலூர்: பெரம்பலூரில் நாகூர் அனிபா நூற்றாண்டு விழா மற்றும் கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பிரதியை சட்டசபை உறுப்பினர் அப்துல் சமது வெளியிட, பெரம்பலூர் தொழிலதிபர் எஸ் எஸ் நிறுவனத்தின் தலைவர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
அரும்பாவூர் இலக்கிய சாரல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி, கருத்தரங்கு, கவியரங்கம் மற்றும் ஆய்வரங்கம் என மூன்று நிகழ்வுகளாக நடந்தன.

முதல் நிகழ்ச்சியாக, நாகூர் அனிபா குறித்த கருத்தரங்கு பேராசிரியர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இதில் கி.மகேந்திரன், எழுத்தாளர் வி.களத்தூர் கமால் பாஷா, பேராசிரியர் ஞானசேகரன் பேராசிரியர் மூர்த்தி, ஆசிரியர் சிலம்பரசன், கவிஞர் ச.மோகன், சனா பாருக் ஆகியோர் உரையாற்றினர்.
இரண்டாம் அமர்வாக, நாகூர் அனிபா குறித்த கவியரங்கம் நடைபெற்றது. இந்த கவியரங்கம் கவிஞர் அகவி தலைமையில் நடைபெற்றது. கவிஞர் இளங்குமரன், கவிஞர் நிழலி, கவிஞர் முத்துமாறன், கவிஞர் இராமர், செந்தமிழ் வேந்தன் ஆகியோர் நாகூர் அனிபாவின் பாடல்களில் இஸ்லாம், அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கவி பாடினர்.
அடுத்ததாக, அரும்பாவூர் சமூக ஆர்வலர் தாகிர் பாஷா எழுதிய "வாழத் தகுதியற்ற நகரத்தின் தடங்கள்" என்ற தலைப்பிலான கவிதை நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை சட்டசபை உறுப்பினர் அப்துல் சமது வெளியிட, பெரம்பலூர் தொழிலதிபர் எஸ் எஸ் நிறுவனத்தின் தலைவர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
நூல் குறித்து எழுத்தாளர் ஸ்ரீமதி, எழுத்தாளர் செயபால் ரத்தினம், பெரம்பலூர் இரா.எட்வின் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்நிகழ்விற்கு பேராசிரியர் தமிழ்மாறன் தலைமை வகித்தார் நிகழ்ச்சியின் இறுதியில் நூல் குறித்தும் அதனுடைய தாக்கம் குறித்தும் சட்டசபை உறுப்பினர் அப்துல் சமது விரிவாக பேசினார்.
நூல் ஆசிரியர் அரும்பாவூர் தாஹிர் பாஷா ஏற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை சாஹிரா தாஹிர் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியானது செந்தில்குமார் நன்றியுரையுடன் நிறைவுற்றது.












Click it and Unblock the Notifications