விஜய்யின் பெரம்பலூர் பிரசாரம் ரத்து: நள்ளிரவு வரை காத்துக்கிடந்த தவெக தொண்டர்கள் அப்செட்
பெரம்பலூர்: பெரம்பலூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பலூரில் நள்ளிரவு தாண்டியும் தொண்டர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த நிலையில், கூட்டம் நடைபெறும் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு முன்பே விஜயின் வாகனம் செல்ல முடியாத அளவு தொண்டர்கள் கூட்டம் இருந்தது. பேசவிருந்த இடத்தை சென்றடைய முடியாததால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை நேற்று (சனிக்கிழமை) தொடங்கினார். திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கிய விஜய், தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்துகிறார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் விஜய் திருச்சி வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து டோல்கேட் வரை விஜய் பிரசார பேருந்தில் வந்தார். சில நிமிடங்களில் சென்று விடும் தூரத்தை, அதாவது 7 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் கடந்து விஜய் வந்தார். வழி நெடுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாக இருந்ததால் விஜயின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்றது.
விஜயின் பிரசார வாகனம் விமான நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய சாலையான டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை வழியாக காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதிக்கு வந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ அவரது பிரசார வாகனம் வந்ததால் திருச்சி நகரமே குலுங்கியது.
ஆனால் தொண்டர்கள் வெள்ளத்தில் அவரது பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து வந்ததால், மதியம் 2.30 மணிக்கு பிரசார இடமான காந்தி மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தது. அங்கு பேசிய விஜய், பின்னர் அடுத்த பாயிண்ட் அரியலூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் விஜயை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். விஜயின் வாகனத்தை பைக்குகளில் தொண்டர்கள் பின்தொடர்ந்தனர். இதனால், அரியலூர் பிரசாரமும் தாமதமானது. நண்பகல் 12 மணிக்கு திட்டமிட்டு இருந்த பிரசாரம் இரவு 8 மணிக்கு மேல்தான் நடைபெற்றது.
எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை, விஜயைப் பார்க்காமல் செல்ல மாட்டோம் என தவெகவினரும் காத்துக்கிடந்து விஜயின் பேச்சைக் கேட்டுவிட்டுச் சென்றனர். இதையடுத்து, அரியலூர் பிரசாரத்தை முடித்துவிட்டு விஜய் குன்னம் வருகை தந்தார். குன்னம் பகுதியிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. நேரம் கடந்துவிட்டதால் விஜய் பேசாமல் கைகளை மட்டும் அசைத்தபடி சென்றார்.
பெரம்பலூரில் பேச விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், நள்ளிரவு மேல் ஆகியும் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. 2 கிலோமீட்டர் தொலைவிற்கு தொண்டர்கள் கூட்டம் இருந்ததால், பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. விஜய் வாகனம் பெரம்பலூருக்குள் செல்லாமல் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால், பல மணி நேரமாக விஜயைப் காண காத்துக்கிடந்த தவெக தொண்டர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர்.
நள்ளிரவு நேரம் ஆனதால், பாதுகாப்பு கருதியும், கூட்டம் நடைபெறும் இடத்திற்கு இன்னும் பல மணி நேரம் ஆகும் சூழல் இருந்ததாலும் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரம்பலூரில் வேறு ஒரு நாளில் கூட்டம் நடத்தப்படும் என்று தவெக கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications