13 வயது சிறுவன் வெட்டிக் கொலை.. இரவு நேரத்தில் கொடூரம்.. அலறிய காரைக்கால்!
புதுச்சேரி: காரைக்கால் அருகே திருப்பட்டினத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே திருப்பட்டினத்தை சேர்ந்த சந்தோஷ் (13) என்ற எட்டாம் வகுப்பு மாணவன் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருப்பட்டினத்தில் நாகப்பட்டினம் - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் திருமலைராஜன் ஆற்று பாலத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பலியான சிறுவன் சந்தோஷின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுவன் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவன் சந்தோஷ் வசித்து வந்த திருப்பட்டினத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவருடன் சந்தோஷ் விளையாடியதை அப்பகுதியினர் பார்த்ததாகவும், அதைத்தொடர்ந்து கொலை நடைபெற்றுள்ளதால் அந்த இளைஞரே சந்தோஷை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் கையுறைகளை ஆன்லைன் மூலமாக வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையில், கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரவு நேரத்தில் காரைக்காலில் 13 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களை பதற வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications