தமிழிசை தந்த ஒப்புதல்.. 250 ஆண்டு பாரம்பரிய புதுச்சேரி ஆளுநர் மாளிகை திடீர் இடமாற்றம்.. என்ன காரணம்?
புதுச்சேரி: 250 ஆண்டு பாரம்பரியம் கொண்ட புதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
புதுச்சேரி.. தமிழகத்தையொட்டி உள்ள யூனியன் பிரதேசமாக உள்ளது. புதுச்சேரி சுதந்திரத்துக்கு முன்பு பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு 1954ம் ஆண்டில் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்தது.

இதையடுத்து புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே கடற்கரையொட்டிய பழமை வாய்ந்த ராஜ்நிவாஸ் கட்டடம் என்பது புதுச்சேரி ஆளுநர் மாளிகையாக மாற்றம் செய்யப்பட்டது. பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் தலைமை கமிஷனர் அலுவலகமாக செயல்பட்ட இந்த கட்டடம் தான் புதுச்சேரி ஆளுநர் மாளிகையாக மாற்றம் செய்யப்பட்டது.
இந்த கட்டடம் தான் புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் அலுவலகம் மற்றும் இல்லமாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஆளுநர் தங்கும் அறைகள், அலுவலகம், ஆளுநர் செயலகம், அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம் என்பது 250 ஆண்டு பழமை வாய்ந்தது. ஆங்கிலேயர் படையெடுப்பு, பிரெஞ்சுகாரர்களின் மீட்டுருவாக்கம் என பல்வேறு வரலாற்று பின்னணியை கொண்ட இந்த கட்டடம் தற்போது சேதமடைந்துள்ளது.
இந்த கட்டடத்தின் உறுதித்தன்மையை இழந்துள்ளதால் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் செய்வது அவசியம் என பொதுப்பணித்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் வழங்கி அதற்கான கோப்புகள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இதையடுத்து தற்காலிகமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை என்பது மாற்றம் செய்யப்பட உள்ளது. ராஜ்நிவாஸ் கட்டடத்தில் பொதுப்பணித்துறையினர் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை அங்கு ஆளுநர் மாளிகை என்பது செயல்படாது. அதற்கு பதிலாக கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் ஆளுநர் மாளிகை செயல்பட உள்ளது.
அதன்படி கடற்கரை சாலையில் கட்டப்பட்டுள்ள நீதிபதிகள் தங்கும் குடியிருப்பில் ஆளுநர் தங்கவும், ஆளுநரின் அலுவலகம், ஆளுநர் செயலகம் ஆகியவை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேரி நகராட்சி கட்டிடத்தில் செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் ராஜ்நிவாஸ் கட்டடத்தில் புனரமைப்பு பணிகள் முழுவடைந்த பிறகு மீண்டும் அங்கு ஆளுநர் மாளிகை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications