எனக்கு இதுதான் சார் மாஸ்க்.. புதுவை போலீஸை தெறிக்கவிட்ட ஆசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் போலீசிடமிருந்து தப்பிக்க, ஒருவர் திருமண தாம்பூல பையை முகக்கவசமாக பயன்படுத்திய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வரும் மே 17 ஆம் தேதி வரை மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதுவும் மக்கள் வெளியே வரும்போது, முகக்கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுமாறு மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு மாநில அரசுகள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன.

புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ரூபாய் 100 அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இதனிடையே போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிக்க நேற்று ஒருவர் கோழி இறைச்சி கடையில் கொடுத்த பில்லை முகக்கவசமாக பயன்படுத்திய சம்பவம் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று அதே போன்று மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார் கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பம் சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபர் ஒருவர், போலீசை பார்த்து பயந்து, தான் கடைக்கு பொருட்கள் வாங்க கொண்டு சென்றிருந்த திருமணத் தாம்பூலப் பையை முகக்கவசமாக பயன்படுத்தினார்.

அவரை போலீசார் அழைத்து இதுதான் மாஸ்க்கா? என கேட்டதற்கு, இதுவும் மாஸ்க்தான், இதில் மோர் பாக்கெட் போட்டுள்ளேன் சுவாசிக்கும் போது மோர் வாசனை வரும். அவ்வப்போது எலுமிச்சை பழத்தையும் இந்த பையில் போட்டு முகக்கவசமாக பயன்படுத்துவேன் என வெகுளித்தனமாக பேசுகிறார்.
அவருடைய விளக்கத்தை கேட்ட போலீசார், சிரிப்பை அடக்க முடியாமல், அந்த நபரை எச்சரித்து அனுப்புகின்றனர். புதுவை மக்களுக்கு மட்டும் இதுபோன்ற வித்தியாசமான யோசனைகள் எப்படிதான் தோன்றுமோ என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications