55 நாட்கள் இழுபறி- புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்றது! ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார்!
புதுச்சேரி: புதுச்சேரியில் 55 நாட்களுக்குப் பின்னர் இன்று முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. 5 அமைச்சர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக கடந்த மாதம் பதவியேற்றார்.
ஆனால் அமைச்சர்கள் யார்? யார்? என்பதை முடிவு செய்வதில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே இழுபறி நீடித்தது. ஒருவழியாக என்.ஆர். காங்கிரஸுக்கு 3 அமைச்சர்கள்; பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர்கள் என முடிவு செய்யப்பட்டது.

பாஜகவில் அமைச்சர் பதவிக்கு மோதல்
இருப்பினும் பா.ஜ.க.வில் யாருக்கு அமைச்சர்கள் பதவி என்பதில் பெரும் பஞ்சாயத்து ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்துவிட்டு பா.ஜ.கவில் சேர்ந்து எம்.எல்.ஏ.வான ஜான்குமாருக்கு சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அமைச்சர் பதவி தரப்படும் என டெல்லி பா.ஜ.க. மேலிடம் முதலில் உறுதி அளித்தது.

ஜான்குமாருக்கு திடீர் மறுப்பு
டெல்லி மேலிடத்தின் வாக்குறுதியை நம்பி, அமைச்சர் பதவி ஏற்கப் போவதாக விளம்பரம் செய்தார் ஜான்குமார். ஆனால் திடீரென பா.ஜ.க.வின் சாய் சரவணகுமாருக்குதான் அமைச்சர் பதவி தருவோம் என்றது டெல்லி பாஜக மேலிடம். இதனால் ஜான்குமார் அதிருப்தி அடைந்தார்.

பாஜகவுக்கு எதிராக போராட்டம்
அத்துடன் புதுச்சேரியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை ஜான்குமார் ஆதரவாளர்கள் சூறையாடினர். பாஜகவுக்கு எதிராக கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். ஆனால் பாஜக தலைவர்கள் இறங்கிவரவில்லை.

இன்று பதவியேற்பு
இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸின் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோரும் பா.ஜ.க.வின் நமச்சிவாயம், சாய் சரவணகுமார் ஆகியோரும் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். இன்று 5 அமைச்சர்களும் பதவியேற்றனர். துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

எத்தனை நாட்கள் நீடிக்குமோ?
புதுச்சேரியில் 55 நாட்கள் இழுபறிக்குப் பின்னர் இன்று அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. தொடக்கம் முதலே என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே அதிருப்தி; பா.ஜ.கவுக்குள்ளும் அமைச்சர் பதவிக்காக மோதல் என்கிற நிலைமையில் இந்த அமைச்சரவை எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ? என்கிற கேள்வியும் எழாமல்ல் இல்லை.












Click it and Unblock the Notifications