‘எங்களுக்கு ரோட்ஷோ நடத்தியே ஆகணும்’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மீண்டும் சந்தித்த புஸ்ஸி ஆனந்த்
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி ரோட்ஷோ மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் காவல்துறையினர் ரோட்ஷோ வுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் விஜய்யின் புதுச்சேரி விசிட் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் விஜய் ரோட்ஷோ நடத்துவது தொடர்பாக ரங்கசாமியுடன் புஸ்ஸி ஆனந்த் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் (டிசம்பர் 5 ஆம் தேதி) புதுச்சேரியில் ரோட்ஷோ மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த நவம்பர் 26 ஆம் தேதி புதுச்சேரி காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வந்தனர். அதில் புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. பொதுக் கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை கூறியிருந்தது.

விஜய் புதுச்சேரி விசிட்
இது தவெக மற்றும் விஜய் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு கடந்த 2 மாதங்களாக விஜய் வெளியில் அதிகம் தலை காட்டுவதில்லை. தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தவெக சார்பில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் அவரின் புதுச்சேரி விசிட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
விஜய் காலாப்பட்டி தொடங்கி கன்னியக்கோவில் வரை ரோட்ஷோ நடத்தி, சோனாம்பாளையம் அருகே பொதுக்கூட்டத்தில் உரையாட திட்டமிடப்பட்டிருந்தத. இதற்காக தவெக சார்பில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் காவல்துறையினரை சந்தித்து 4 முறை அனுமதி கடிதம் வழங்கியிருந்தனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் நேரடியாக புதுச்சேரி சென்று அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
ரங்கசாமி - ஆனந்த் சந்திப்பு
ரங்கசாமி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை அவர்கள் சந்தித்து ஆலோசனையும் நடத்தியிருந்தனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்றும் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு கருதி காவல்துறை விஜய் ரோட்ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. நன்கு ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியிருந்தனர்.
இது தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து விஜய்யின் புதுச்சேரி விசிட் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ரங்கசாமியின் அலுவலகத்தில் வைத்து கடந்த 1 மணி நேரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மீண்டும் கோரிக்கை
அப்போது ரோட்ஷோ நடத்த மீண்டும் அனுமதி கேட்டு தவெக சார்பில் ரங்கசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் முடிவில் புதுச்சேரி அரசு தரப்பில் நல்ல செய்தி சொல்வார்கள் என்று தவெக வினர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். புதுச்சேரி அரசு தரப்பில் அங்குள்ள எதார்த்த சிக்கல்களை ஆனந்திடம் எடுத்துரைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications