கொரோனா எதிரொலி.. பயோமெட்ரிக் வேண்டாம்.. ஐடியே போதும்.. என்எல்சி அதிரடி!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் எதிரொலியாக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 60 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு நிலக்கரி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், சோலார் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு பணிபுரியும் பொறியாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், இன்கோ சர்வ சொசைட்டி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக என்எல்சி ஊழியர்கள் அடையாள அட்டை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், கைவிரல் ரேகை பதிவு தேவையில்லை என என்எல்சி நிர்வாகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications