து.முதல்வர் பதவி இல்லையா? முதல்வர் பதவியை மறந்துடுங்க கட்சியும் இருக்காது ரங்கசாமியை நெருக்கும் பாஜக
புதுச்சேரி: புதுச்சேரியில் 24 நாட்களுக்கு பின் எம்.எல்.ஏக்கள் மட்டும் பதவியேற்ற நிலையில் துணை முதல்வர் பதவியை பெறாமல் ஓயப் போவது இல்லை என கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. ஆனால் துணை முதல்வர் பதவியை தரப்போவதே இல்லை என்பதில் முதல்வர் ரங்கசாமி உறுதியாக உள்ளாராம்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை கைப்பற்றியது. முதலில் என்.ஆர். ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றார்.

எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதாவது 24 நாட்களுக்குப் பின்னர் எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ரங்கசாமி பிடிவாதம்
இந்நிலையில் துணை முதல்வர் பதவியும் 2 அமைச்சர்களும் தேவை என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அமைச்சர் பதவி தர தயாராக இருக்கும் ரங்கசாமி, துணை முதல்வர் பதவியை தரப்போவது இல்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.

பாஜக மீது அச்சம்
ஏனெனில் இப்போதே பாஜக 3 நியமன எம்.எல்.ஏக்கள், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் என கூடுதலாக 6 எம்.எல்.ஏக்கள் பலம் பெற்றுள்ளது. சட்டசபையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் தமது தலைமையிலான ஆட்சியை பாஜக கவிழ்த்துவிடும் என அஞ்சுகிறார் ரங்கசாமி.

ரங்கசாமிக்கு எச்சரிக்கை
அதேநேரத்தில் பாஜகவோ, துணை முதல்வர் பதவியை தராமல் ரங்கசாமி இழுத்தடிப்பதை இம்மியும் ரசிக்கவில்லையாம். இதனால் செம கடுப்பில் உள்ள பாஜக, ரங்கசாமிக்கு ஒரே ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறதாம்.

பாஜக ஆட்சி அமைக்கும் என நெருக்கடி
அதாவது துணை முதல்வர் பதவியை எங்களுக்கு தராமல் இழுத்தடித்து கொண்டே போனால் பாஜகவே ஆட்சி அமைக்க களமிறங்கும்; என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் எங்கள் பக்கம் வருவார்கள் எனவும் மிரட்டி விட்டிருக்கிறதாம். இதனால் என்ன செய்வது என தெரியாமல் ரங்கசாமி தரப்பு விழிபிதுங்குகிறதாம்.












Click it and Unblock the Notifications