புதுச்சேரி சபாநாயகராக பாஜகவின் ஏம்பலம் செல்வம் பதவியேற்றார்.. போட்டியின்றி தேர்வு!
புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகராக பாஜகவின் ஏம்பலம் செல்வம் இன்று பதவியேற்றார்.
சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை பிடித்தது. இது போக அங்கு பாஜகவிற்கு 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அதேபோல் அங்கு பாஜக உறுப்பினர்கள் 3 பேர் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாஜகவிற்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இதையடுத்து புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றார். ஆனால் அங்கு அமைச்சர்களும், சபாநாயகரும் தேர்வு செய்யப்படாமல் இருந்தனர். புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் அறிவிக்கப்பட்டு இருந்தார்
அமைச்சர்களை தேர்வு செய்வதில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பல கட்ட பேச்சுக்கள் நடந்தன. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், கடைசியாக நடந்த பேச்சு வார்த்தையில் இரண்டு அமைச்சர், சபாநாயகர் பதவியை பெற பாஜக ஒப்புக்கொண்டது.
எல்லாம் சுபம்.. ரங்கசாமி வெளியிடப்போகும் அறிவிப்பு.. புதுச்சேரி பாஜக ஏக குஷி! நமச்சிவாயம் ஹேப்பி
இதையடுத்து சபாநாயகர் பதவிக்கு பாஜகவின் ஏம்பலம் செல்வம் மனுதாக்கல் செய்தார். முதல்வர் ரங்கசாமி இவரை முன்மொழிந்தார், பா.ஜ.க. சட்டமன்ற கட்சித் தலைவர் நமச்சிவாயம் இவரை வழிமொழிந்தார். இவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் இன்று புதுச்சேரி சபாநாயகராக பாஜகவின் ஏம்பலம் செல்வம் போட்டியின்றி பதவியேற்றார்
இதையடுத்து புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு விரைவில் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். புதுச்சேரி சபாநாயகராக பாஜக உறுப்பினர் பதவி ஏற்பது இதுவே முதல்முறையாகும்.