தீபாவளி வாழ்த்து... புதுச்சேரி டிஜிபி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள்..!
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் டிஜிபி காலில் விழுந்து தீபாவளி வாழ்த்து பெற்றது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜான் குமார். காங்கிரஸில் நாராயணசாமிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து இப்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இவரது மகன் விவிலியன் ரிச்சர்டு புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அப்பாவும் மகனும் பாஜக எம்.எல்.ஏ.க்களாக உள்ள நிலையில், அவர்கள் இருவரும் தீபாவளி வாழ்த்துபெற வேண்டி அம்மாநில டிஜிபி ரன்வீர் சிங்கை சந்தித்தனர்.
அப்போது டிஜிபிக்கு இனிப்புகள் வழங்கிய விவிலியன் ரிச்சர்டு எம்.எல்.ஏ. பழக்க தோஷத்தில் டிஜிபியின் காலில் தடாலென விழுந்தார். இதைப்பார்த்த அவரது தந்தையும் காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜான்குமாரும் டிஜிபி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் போலீஸ் அதிகாரி காலில் விழுந்து வாழ்த்துப்பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கையெடுத்து கும்பிடுவதும் காலில் விழுந்து ஓட்டுக் கேட்பதும் அரசியல்வாதிகளுக்கே உரிய பழக்க தோஷம் என்றும் அந்த பழக்க தோஷத்தின் காரணமாகவே தந்தையும், மகனும் எம்.எல்.ஏ. என்ற பதவியை கூட மறந்து போலீஸ் அதிகாரி காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே பண்டிகை நாட்களில் வயதில் மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது வழக்கமான ஒன்று என்றும் இதில் பதவியை பார்க்கக் கூடாது எனவும் ஜான்குமார் தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications