தாம்பூல பையில் ‘குவார்ட்டர்’.. குஷியில் எல்லை மீறிய பெண்ணின் தாய்மாமனுக்கு ஆப்பு வைத்த கலால் துறை!
புதுச்சேரி : புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு குவார்ட்டர் மது பாட்டில் வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுபானம் வழங்கிய நபர், மண்டப உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 28ஆம் தேதி மணப்பெண்ணின் சொந்த ஊரான புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த வரவேற்பு விருந்தில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மணமகள் வீட்டார் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன், குவார்ட்டர் மது பாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர். உறவினர்களை குஷிப்படுத்துவதற்காக மணப்பெண்ணின் தாய்மாமா தான் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார்.
சென்னையில் இருந்து திருமண ரிசப்ஷனுக்கு வந்த நண்பர்களும், உறவினர்களும் விளையாட்டாக கேட்டதால், வித்தியாசமாக தாம்பூலத்துடன் மது பாட்டில் தர முடிவு செய்துள்ளார் அவர். ஆண்களுக்கு தாம்பூல பை தரும்போது அதில் மது பாட்டிலையும் சேர்த்து தந்தோம். பெண்களுக்கு வழக்கமான தாம்பூல பை தந்தோம். தாய்மாமனாக உறவினர்களுக்காகத்தான் மது பாட்டில் தந்தேன் என பெண்ணின் தாய்மாமன் கூறியுள்ளார்.
திருமண வரவேற்பு நிகழ்வில் தாம்பூலத்துடன் மது பாட்டில் வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த செயல் அநாகரீகத்தின் உச்சம், கலாச்சார சீர்கேட்டு வழிவகுக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்வில் தாம்பூலத்துடன் மது பாட்டில் கொடுக்க ஏற்பாடு செய்த மணப்பெண்ணின் தாய்மாமன் உள்ளிட்டோருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து புதுச்சேரி கலால் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மதுபானம் விற்ற கடை உரிமையாளர், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற மண்டப உரிமையாளர், மணமகளின் தாய்மாமன் ராஜ்குமார் ஆகியோருக்கு மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உறவினர்களை குஷிப்படுத்த செய்த விஷயம், தீயாகப் பரவி அபராதம் விதிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது திருமண வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications