ஜிப்மர் மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது.. 3 காஸ்ட்லி செல்போன்கள் பறிமுதல்
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளி போல் நடித்து செல்போன் திருடிய விழுப்புரத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவனிடமிருந்து நோயளிகளிடமிருந்து திருடப்பட்ட 3 விலை உயர்ந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்(49). இவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பார்வையாளர் அறையில் அமர்ந்திருந்த கிருஷ்ணனின் விலையுயர்ந்த செல்போன் திருடுபோனது. இதுதொடர்பாக அவர் தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தன்வந்திரி நகர் காவல்நிலை போலீசார், உடனடியாக ஜிப்மர் மருத்துவமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்ற ரோந்து போலீசார், நோயாளிகள் தங்கும் அறை அருகே சந்தேகபடும்படியாக சுற்றிதிரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த முகமது இர்பான்(29) என்பதும், கடந்த பல மாதங்களாக ஜிப்மர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் நோயாளிபோல் நடித்து செல்போன்களை திருடி வந்ததாக ஒப்புகொண்டார்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து மருத்துவமனையில் திருடப்பட்ட 3 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications