கொரோனா வைரஸ்.. புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை
புதுச்சேரி: கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக காரைக்காலில் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் மாஸ்க் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசு மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சட்டபேரவை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண், சுகாதாரதுறை அதிகாரிகள் மற்றும் அரசு செயலாளர்கள் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு நிர்வாகம் அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை அதிக காய்ச்சல் மற்றும் இருமலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 16 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு,14 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் அவர்கள் மருத்துவமனையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை குறித்த முடிவுகள் வரவில்லை என்பதால் 2 பேர் மட்டும் தற்போது தனி அறையில் கண்காணிப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் இதுவரை கொரோனா நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நிதியும் ஒதுக்கபட்டுள்ளது. புதுச்சேரியில் முக கவசம் பற்றாக்குறை காரணமாக, மத்திய அரசு மூலம் முக கவசம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில எல்லைகளில் சுற்றுலாப்பயணிகள் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு தொடர்ந்து தேவையான அறிவுரைகளை தெரிவித்து வருகிறது. மேலும் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நளன் தீர்த்த குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர் மட்டும் தெளிக்கபடும். மருத்துவர்கள் குழு மூலம், பக்தர்கள் கண்காணிப்படுகிறார்கள் என்றார். அதேபோல் அரசுத்துறை அலுவலகங்களில் மறு உத்தரவு வரும் வரை பயோ மெட்ரிக் வருகை பதிவேடு பயன்படுத்த வேண்டாமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தினந்தோறும் காலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளில் ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு விழா நடத்துவதற்கு தடை விதித்து புதுச்சேரி அரசின் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.