ஊரடங்கை மீறி புதுச்சேரியில் போராட்டம்.. காங். கூட்டணிக் கட்சிகளால் பரபரப்பு.. வலுக்கட்டாயமாக கைது!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து, ஊரடங்கு உத்தரவை மீறி வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட முயன்ற ஆளும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 3 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு, புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 995 கோடி வழங்க வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். ஆனால் மத்திய அரசு புதுச்சேரிக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

ஆனால் பிற மாநிலங்களுக்கு நிதி தரப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு நிதி வழங்கிய மத்திய அரசு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு நிதி அளிக்காதது மக்களை வஞ்சிக்கும் செயல் என காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் புதுச்சேரிக்கு நிதி அளிக்காத மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து இன்று கறுப்பு கொடியுடன் தர்ணா போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தன.

அதன்படி இன்று தர்ணா போராட்டம் நடத்துவதற்காக மிஷன் வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமையில், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், திமுக அமைப்பாளர்கள் சிவக்குமார், சிவா எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் ராஜங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிககள் கறுப்புக்கொடி ஏந்தியும், கறுப்பு பேட்ஜ் அணிந்தும் திரண்டனர்.

இதையடுத்து போலீஸார் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறி அவர்களை வலுகட்டாயமாக கைது செய்தனர். அப்போது அவர்கள், மத்திய அரசு தொடர்ந்து புதுச்சேரி மாநில மக்களை வஞ்சித்து வருகிறது என்றும், புதுச்சேரி மாநிலத்திற்கு ஜி.எஸ்.டி இழப்பீடு, 7 வது சம்பள கமிஷன் என பல்வேறு வகையிலான நிதிகளை மத்திய அரசு வழங்கக்கோரியும், மத்திய அரசு நிதி தர மறுத்து வரும் நிலையில், அதனை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பெற்றுத் தரக்கோரியும், பதாகைகளை கையில் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை தனித்தனி வாகனங்களில் ஏற்றி வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச்சென்றனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக கடற்கரை சாலையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளதால் தலைமை தபால்நிலையத்திற்கு போராட்ட இடத்தை மாற்றினர். இதற்காக மிஷின் வீதியில் அவர்கள் திரண்டபோது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications