புதுச்சேரியில் புது ரெக்கார்டு! வரலாறு படைத்த வாக்காளர்கள்.. வாக்கு சதவிகித்தை பாருங்க!
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்திருக்கிறது. மாலை 6 மணி நிலவரப்படி புதுச்சேரியில், 89.2% வாக்குகள் பதிவாயிகிருக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 83.42% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதற்கு முன்னர் கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலின்போதுதான் புதுச்சேரியில் அதிக அளவு (86%) வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்தத் தேர்தலில் முக்கியமாக மூன்று கூட்டணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
NDA கூட்டணி: அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) தலைமையிலான கூட்டணி.
INDIA கூட்டணி: காங்கிரஸ், திமுக மற்றும் விசிக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி.
புதிய எதிர்பார்ப்பு: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) இந்தத் தேர்தலில் களம் இறங்கியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுடன் சீமானின் நாம் தமிழர் கட்சி (NTK) தனது முத்திரையைப் பதிக்க தீவிரமாகப் போட்டியிடுகிறது.
முக்கிய சம்பவங்கள்
உடல்நலத்தையும் மீறிய கடமை: காரைக்கால் தெற்கு தொகுதியில், விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்துகொண்ட மகேந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
மாதிரி வாக்குச் சாவடிகள்: மங்கலம் தொகுதியில் உள்ள கீழூர் அரசு நடுநிலைப் பள்ளி 'தனித்துவமான' வாக்குச் சாவடியாக மாற்றப்பட்டிருந்தது. அங்கு தமிழர்களின் கலை வடிவங்கள், புதுச்சேரியின் விடுதலை வரலாறு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது வாக்காளர்களைக் கவர்ந்தது.
தேர்தல் நிறைவு
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல் 9, 2026) மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்னதாக வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
SIR தான் காரணம்
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வழக்கமாக நடைபெறும் 'Special Summary Revision' என்பதற்குப் பதிலாக, இந்த முறை Special Intensive Revision (SIR) என்ற தீவிரமான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரியிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனர். இதன் மூலம் தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டனர்.
இறந்தவர்கள் அல்லது குடிபெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் மிகவும் துல்லியமாக மாற்றப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே ஒருவரால் வாக்களிக்க முடியும் என்பதால், இந்தத் துல்லியமான பட்டியல் அதிக வாக்குப்பதிவிற்கு வழிவகுத்தது. கேரளாவிலும் இதேபோல வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications