கணவர் மீது போலீசில் புகார் கொடுத்த முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா.. புதுச்சேரியில் பரபர!
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சந்திர பிரியங்கா, தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவான சந்திரபிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வந்தார். சந்திர பிரியங்கா, போக்குவரத்து, ஆதி திராவிடர் நலத்துறை, வீட்டு வசதி, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளை கைவசம் வைத்திருந்தார்.

இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளாக அமைச்சர் பதவியில் இருந்து வந்த சந்திரபிரியங்கா கடந்த அக்டோபர் 10ஆம் தேதியன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டார். அதில் சாதி ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.
ஆனால் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அவரது செயல்பாடு சரியில்லாததால் முதல்வர் ரங்கசாமி அவரை நீக்கம் செய்ய கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. யூனியன் பிரதேசம் என்பதால் பதவி நீக்கத்துக்கு உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டும். அதற்குள் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
இதனால் அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கப்பட்டாரா அல்லது ராஜினாமா செய்தாரா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் சந்திரபிரியங்கா பதவி நீக்கம் செய்ததை குடியரசுத் தலைவர் ஏற்று கொண்டு, அதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, சந்திர பிரியங்கா கடந்த 6 மாத காலமாக கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது சந்திர பிரியங்காவின் அமைச்சர் பதவி பறிப்பால் மகிழ்ச்சியடைந்த கணவர் சண்முகம், ஸ்டீரீட் டான்ஸ் ஆடிய வீடியோவை இஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சந்திரபிரியங்கா டிஜிபி ஸ்ரீநிவாசனை நேரில் சந்தித்து, தனது கணவர் சண்முகம் மீது புகார் அளித்துள்ளார். தனது கணவர் சண்முகம், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தொடர்ந்து அவதூறாக பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாய்மொழியாக புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரிக்குமாறு டிஜிபி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications