இலவச மின்சாரம்.. அதைவிடுங்க. ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனுமதி? கரண்ட் பில்லில் அரசு அதிரடி
புதுச்சேரி: ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த புதுச்சேரி அரசு அனுமதி தந்துள்ளது... இதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
மின் மீட்டர்களில் உள்ள குறைபாடுகளை களையவே, தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்கள் கொண்டுவரப்படுகின்றன.. இதற்கான டெண்டர்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகளம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன்மூலம், மின் பயனர்களுக்கு மாதந்தோறும் மின் கட்டணம் உடனடியாக எஸ்எம்எஸ் வாயிலாக தெரிந்து கொள்வதுடன், மின் பயன்பாட்டை கணக்கீடு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புகார் எண்: அதேபோல, இந்த மின் இணைப்புகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அது தொடர்பான புகார்களையும் தெரிவிக்கும்விதமாக, பிரத்யேக எண்கள் வழங்கப்பட உள்ளதாக மின்வாரியம் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது. அதுமட்டுமல்ல, மின் இணைப்பு மற்றும் மீட்டர் மின் கம்பங்கள் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனை என்றாலும், புகார் அளிப்பதற்கு பொதுமக்களுக்கு வசதியாக, புதிய எண்களை வழங்கவும் முடிவு செய்துள்ளதாம்.
இந்நிலையில், புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி தந்துள்ளது... ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்படும் என்று கடந்த 2022 பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்த நிலையில், ரூ.251 கோடியில் மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையும் சமர்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதியும் தந்திருந்தது.
ஆனால், இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. செல்போன் போலவே, முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் இந்த முறையால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. ஆனாலும், மாநில அரசு கேட்கவில்லை.. ஆளுநர் தமிழிசையும் இதற்கு ஒப்புதல் தந்தார்.
மின்துறை: பிஎப்சி கன்சல்டிங் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்த நிலையில், இப்போது, ப்ரீபெய்ட் மின் மீட்டரை பொருத்த பிஎப்சிசிஎல் நிறுவனத்துக்கு அனுமதியை மின்துறை தந்துள்ளது. இதற்காக ரூ. 393 கோடிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சார்பு செயலர் வெளியிட்டுள்ள உத்தரவில் உள்ளதாவது: "புதுச்சேரியில் டோடெக்ஸ் முறையில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் வீடுகளில் பொருத்தப்படவுள்ளது. இதற்கான திட்டத்தை செயல்படுத்தும் ஏஜென்சியாக பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் கன்சல்டிங் நிறுவனம் (பிஎப்சிசிஎல்) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறையும் அனுமதி தந்துள்ளது.
கூடுதல் தொகை: இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.393.62 கோடிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்கு நிதித்துறை ஒப்புதல் தந்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஏற்கெனவே ரூ.250.16 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும், திட்டத்தை செயல்படுத்த அதிக நிதி தேவைப்பட்டதால் மறுசீரமைப்பு செய்து கூடுதல் தொகைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இதில் மொத்தமுள்ள 4.07 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க ரூ.370.57 கோடி செலவாகிறது. இதில் மின் மீட்டர் வாடகை என்ற அடிப்படையில் 90 மாதங்களில் ரூ.369.70 கோடியை புதுச்சேரி அரசு திருப்பி செலுத்தும். மின்துறை இதற்கான கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மின்துறை தனியார்மயமானால் விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.. ஆனால், அரசு தரப்பில விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என உறுதி அளிக்கப்பட்டது. அதுபோலவே, இந்த ப்ரீபெயிட் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தையும் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications