புதுச்சேரி பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம்.. மும்மொழியைக் கொள்கையை 7 நாட்களுக்குள் அமல்படுத்த உத்தரவு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் 2026 -2027 ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மும்மொழிக் கொள்கை காரணமாக அரசு அலுவல் மொழியான பிரெஞ்சு நீக்கப்பட்டு புதுச்சேரி பள்ளியில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளதால் பெற்றோர், மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தனி கல்வி வாரியம் கிடையாது. இதனால், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் தமிழ்நாடு பாடத் திட்டமும், மாகே பிராந்தியத்தில் கேரள பாடத் திட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர பாடத் திட்டமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் தமிழ்நாடு அரசின் மெட்ரிக் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Hindi mandatory

சிபிஎஸ்இ பாடத்திட்டம்

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கடந்த 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு முழுமையாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்தது.

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளிலும் படிப்படியாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் போலவே புதுச்சேரியிலும் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலமும், தனியார் பள்ளிகளில் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் இவற்றில் ஏதாவது 2 மொழிகளை மாணவர்கள் படித்து வந்தனர்.

7 நாட்கள் கெடு

இந்நிலையில், மத்திய கல்வி வாரியம் - சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, நடப்பு கல்வி ஆண்டு (2026-27) முதல் 6 ஆம் வகுப்பில் இருந்து ஆங்கிலம், இந்தி, தமிழ் என மும்மொழிகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிபிஎஸ்இ இயக்குநர் பிரக்யா சிங் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026-27ம் கல்வியாண்டு முதல் 6ம் வகுப்பில் இருந்து மும்மொழி திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதுவரை அமல்படுத்தாத மற்ற பள்ளிகளும், இந்த அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

தாமதமின்றி அமல்

3 வது மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் விரைவில் கிடைக்கப்பெற வேண்டும். அதேநேரம் உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்கள், கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி 6 ஆம் வகுப்பில் இருந்து மும்மொழியை பள்ளிகள் கற்பிக்க வேண்டும். இதுதவிர பள்ளிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த மும்மொழி விவரங்களை இறுதி செய்து, தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஒரு பள்ளி 6 ஆம் வகுப்பில் எந்த 3 ஆம் மொழியை அறிமுகம் செய்கிறதோ, அதே மொழிதான் அந்த பள்ளிக்கான 9, 10-ம் வகுப்புகளில் விருப்ப பாடமாக இருக்கும். எனவே, அனைத்துப் பள்ளிகளும் மும்மொழி திட்டத்தை அமல் செய்வதை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியை தேர்ந்தெடுக்கும் கட்டாயம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கலச்சார அடையாளங்களில் ஒன்றாக பிரெஞ்சு மொழி விளங்கி வரும் நிலையில், இங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இரண்டாம் மொழியாக பிரெஞ்சை தேர்வு செய்து பயின்று வருகின்றனர். தற்போதைய, புதிய உத்தரவால் இரண்டு இந்திய மொழிகளை கற்க வேண்டும் என்கிற விதிமுறை அமலுக்கு வருகிறது.

இதனால், மாணவர்கள் பிரெஞ்சு மொழிக்கு பதிலாக இந்தியைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+