குடிக்காம இருக்க முடியலை.. ரூ. 71 லட்சம் மதிப்புள்ள 37,000 லிட்டர் கள்ள மது பறிமுதல்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட ரூபாய் 71 லட்சம் மதிப்புள்ள 37 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வந்த நிலையில், குறிப்பாக 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த புல் பாட்டில் விஸ்கி மற்றும் பிராந்தி 4 ஆயிரம் ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் சாராயம் ரூபாய் 1,500 என விலை உயர்த்தி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேலும் மதுபான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட போதிலும் கள்ளத்தனமாக மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. நாள்தோறும் மதுபானங்கள் பிடிபடுவது, மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதும் வழக்கமான நடைமுறையாக இருந்தது. இதனால் இவ்விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேரடியாக தலையிட்டு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இது தொடர்பான விசாரணையில், கலால்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மதுபான விற்பனைக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் மதுபான விற்பனைக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் கார்த்திகேயன் உள்பட கலால் துறையினர் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். மேலும் போலீஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் கலால் துறை துணை ஆணையராக பதவி வகித்து வந்த தயாளன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் அல்வால் காவல்துறை தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட 37 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு 71 லட்சம் எனவும், கள்ளத்தனமாக மது விற்கப்பட்டாதாக இதுவரை மொத்தம் 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications