தேவாலயங்களில் சிசிடிவி கேமிராவை உடனடியாக பொருத்துக... புதுச்சேரில் பலத்த பாதுகாப்பு
புதுச்சேரி: இலங்கையில் தேவாலயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் திருநாள் அன்று இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் 8 க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக, 27 சதிகாரர்களை பிடித்து விசாரணை நடந்து வருகிறது.
இலங்கை தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்ற ஐஎஸ்.. ஏன் இந்த தாமதம்? மர்மம் என்ன?
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும், புதுச்சேரியில் நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களில், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மக்கள் கூடும் வழிபாட்டு தலங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்ப்பட்டு வருகிறது. சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களில் உடனடியாக சிசிடிவி கேமராக்களை பொருத்த காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும் தேவாலயங்களுக்கு வருபவர்கள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர்.