புதுச்சேரியில் கோடை மழை.. குளிர்ந்த பூமி.. பொதுமக்கள் மகிழ்ச்சி..
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்ததால், பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், கடும் வெப்பத்தின் காரணமாகவும் மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.


இந்நிலையில் இன்று காலை முதல் புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிளான மடுகரை, மதகடிப்பட்டு, வில்லியனூர், கனகசெட்டிகுளம், கன்னியகோவில், திருக்கனூர், ஏம்பலம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


மேலும் ஊரடங்கு காரணமாக வீட்டில் உள்ள மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த கோடை மழையை ரசித்தபடி, தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனிடையே மழை காரணமாக சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவது, கிருமி நாசினி தெளிக்கும் பணி மற்றும் பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளில் லேசான தொய்வு ஏற்பட்டது.













Click it and Unblock the Notifications