Kiran Bedi: புதுச்சேரியை விட்டு வெளியேறினார் கிரண் பேடி.. 20ம் தேதிதான் திரும்புகிறார்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் வலுத்து வரும் நிலையில் புதுவையிலிருந்து வெளியேறியுள்ளார் ஆளுநர் கிரண் பேடி. சென்னை வந்துள்ள அவர் 20ம் தேதி வரை டெல்லியில் இருப்பார். அதன் பிறகே புதுச்சேரி திரும்பவுள்ளார்.
புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை முன்பு இரண்டாவது நாளாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் எதிரொலியாக, ஆளுநர் மாளிகை முழுவதும் மத்திய அதிவிரைவு அதிரடிப்படையினர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் காரணமாக நேற்றிலிருந்து ஆளுநர் மாளிகையிலேயே முடங்கியிருந்த ஆளுநர் கிரண்பேடி பலத்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று காலை சாலை மார்க்கமாக சென்னை சென்றார்.
சென்னையில் இன்று பிற்பகல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் அதன் பிறகு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். மாலையில் டெல்லி செல்லும் அவர் 20ம் தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அதன் பிறகே அவர் புதுச்சேரி திரும்புவார் எனத் தெரிகிறது.
கிரண்பேடி ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, தங்களது போராட்டத்திற்கு பயந்துகொண்டு கிரண்பேடி ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி உள்ளதாகவும், தங்களது கோரிக்கையான மக்கள் நலன் சார்ந்த 39 திட்ட கோப்புகளில் கையெழுத்திட்டால் மட்டுமே தனது தர்ணா போராட்டத்தினை கைவிடுவோம் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆளுநர் கிரண்பேடி , நாராயணசாமிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், 21 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம். தற்போது தர்ணாவினை கைவிடுமாறு முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் முதலமைச்சர் அக்கடிதத்தை நிராகரித்து விட்டார்.
தர்ணாவில் ஈடுபட்டுள்ள இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி மக்கல் நலன் சார்ந்த திட்ட கோப்புகளில் கையெழுத்திட்டால் மட்டுமே தர்ணாவினை கைவிடுவோம் என நாராயணசாமி கூறியிருந்தார். இதையடுத்து நேற்று இரவு தலைமை செயலர் அஸ்வினி குமார் மற்றும் டிஜிபி சுந்தரி நந்தா ஆகிய இருவரும் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதனை அடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து இரவு முழுவதும் தரையில் உண்டும், உறங்கியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மத்திய அதிவிரைவு அதிரடிப்படையினரும் படை 4 கம்பெணி அரக்கோணம் மற்றும் ஆவடியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆளுநர் மாளிகை முழுவதையும் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.