கிரண்பேடி வைத்த பார்ட்டி.. டீ குடிக்க வந்த நாராயணசாமி.. ஆனால் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் குடியரசு தின விழாவையொட்டி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தேநீர் விருந்தளித்தார். இதை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் முதல்வர் நாராயணசாமியும், அவரது அமைச்சர்களும் புறக்கணிக்காமல் கலந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.
நாட்டின் 70 வது குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி ராஜ்நிவாசில் ஆளுநர் கிரண்பேடி தேநீர் விருந்து அளித்தார். இந்த தேநீர் விருந்தை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தன.
ஆனால் மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ள கிரண்பேடியை மத்திய அரசு உடனடியாக திரும்பபெறக்கோரி டெல்லி வரை சென்று கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்ளை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் நாராயணசாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் தேநீர் விருந்தில் பங்கேற்றார்.
இது பார்க்க வித்தியாசமாக இருந்தது. இந்த தேநீர் விருந்தில் சபாநாயகர் வைத்தியலிங்கம் மற்றும் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.