நாஞ்சில் சம்பத்துக்கு நேரமே சரியில்லை.. பேச ஆரம்பித்த உடனேயே பாய்ந்த வழக்குகள்!
Recommended Video

புதுச்சேரி: நாஞ்சில் சம்பத்துக்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் அரசியல் மேடை ஏறிய உடனேயே அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை இழிவாக பேசியதாக பாலினம் சம்பந்தமாக கொச்சைப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.

நுணலும் தன் வாயால்
தவளகுப்பம் பகுதியில் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்யும் போது துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆணா அல்லது பெண்ணா என தெரியவில்லை எனவும் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும் கடுமையாக சாடினார்.

கடும் விமர்சனம்
மேலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கடுமையாக விமர்சனம் செய்த நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட தேர்தல் அதிகாரி அருணிடம் பாஜக நிர்வாகிகள் புகார் மனு அளித்து இருந்தனர்.

போலீஸ் நிலையத்தில் புகார்
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரின் செயலர் சுந்தரேசன் தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நாஞ்சில் சம்பத் மீது அசிங்கமான வார்த்தைகளால் திட்டுதல் , பாலினம் சம்பந்தமாக கொச்சைப்படுத்தி பேசுதல், பெண்ணை பொது இடத்தில் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட
3 பிரிவுகளின் கீழ் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை வருமா
ஆளுநரின் செயலரே புகார் அளித்துள்ளதால் நாஞ்சில் சம்பத் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலக்கிய பணியிலிருந்து அரசியல் பணிக்கு நாஞ்சில் சம்பத் திரும்பியதுமே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications