ஆரோவில் கிரவுன் திட்டத்துக்காக.. வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தடை!
புதுச்சேரி: ஆரோவில் சர்வதேச நகரத்தில் கிரவுன் எனப்படும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்காக மரங்களை வெட்டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியை அடுத்த ஆரோவில் சர்வதேச நகரம் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. புதுச்சேரி மாநில எல்லைக்குள்ளும் சில பகுதிகள் உள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த 50 ஆயிரம் பேர் வசிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்ட ஆரோவில் சர்வதேச நகரத்தில் தற்போது 3000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஆரோவில் சர்வதேச நகரத்தில் அன்னையின் கனவு திட்டத்தின் கீழ் கிரவுன் சாலை அமைப்பது உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சில நாட்களுக்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.

போலீஸ் குவிப்பு
அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலையில் மீண்டும் மரங்களை வெட்டும் பணிக்காக வந்த ஜே.சி.பி. வாகனத்தை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவர்களை தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டது. இதனால் போலீஸ் குவிக்கப்பட்டனர்.

காடுகள் பாதுகாப்புச் சட்டம்
இந்தப் பிரச்சனை தொடர்பாக நவ்ரோஸ் மோடி என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 'ஆரோவில்லில் அமைந்திருக்கும் மரங்கள் அனைத்தும் கோதவர்மன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 'காடு' என்கிற வரையறைக்குள் வருவதால் காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் மரங்களை வெட்டவும் சாலை அமைக்கவும் உரிய அனுமதியை ஆரோவில் நிர்வாகம் பெற்றிருக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

முகாந்திரம் உள்ளது
மேலும் இத்திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க ஆரோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு கூறியதாவது:- ஆரோவில்லில் சாலை அமைக்கும் பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு வனத்துறையின் முன் அனுமதி அவசியம் என்கிற மனுதாரரின் வாதத்தில் முகாந்திரம் உள்ளது.

இடைக்காலத் தடை
இப்பிரச்சனையின் அவசரம் மற்றும் முக்கியத்துவம் கருதி தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010ன் உத்தரவு 39, விதி 1 மற்றும் பிரிவு 19(4)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர் மனுதாரரின் வாதத்தைக் கேட்பதற்கு முன்பாகவே மரங்களை வெட்டுவதற்கு 17.12.2021 வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆரோவில் பன்னாட்டு நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசமபர் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications