ஜிப்மரில் மருத்துவ படிப்பு சேர்வதற்கான ஆன்லைன் தேர்வு துவங்கியது.. 1.84 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
புதுவை: புதுச்சேரியில் இயங்கிவரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஜிப்மர் மருத்துவ கல்லூரியும். தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்நிறுவனம், மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்குகிறது. இது கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவப்படிப்புகளை இந்நிறுவனம் வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த கல்லூரியில் மருத்துவம் பயில வருகின்றனர்.
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research என்பதன் சுருக்கமே ஜிப்மர் என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கான தேர்வு நாடு முழுவதும் உள்ள 25 மாநிலங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 280 மையங்களில், சுமார் 1 லட்சத்து 84 ஆயிரத்து 272 மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வுகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் உள்ள 150 எம்பிபிஎஸ் இடங்களும், ஜிப்மர் காரைக்கால் கிளையில் உள்ள 50 இடங்களுக்கும் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கான நுழைவுத்தேர்வு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
25 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 280 மையங்களில் 1,84,272 மாணவர்கள் ஆன்லைன் மூலம் இத்தேர்வை எழுதி வருகின்றனர். இந்த தேர்வு காலை மாலை என இரு வேளையாக பிரித்து நடத்தப்படுகிறது.
காலையில் நடைபெறும் ஜிப்மர் மருத்துவ படிப்புக்கான தேர்வை 94 073 பேர், மாலையில் 90 199 பேர் என இரு வேளையில் தேர்வுகளை எழுதுகின்றனர். தேர்வு எழுத வரும் மாணவர்கள் முழுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மட்டும் 7 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 2,279 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். மேலும் தேர்வு முடிவுகள் ஜூன் 21-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கல்லூரியில் சேர்வதற்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேர நீட் தேர்வு அவசியமில்லை. நுழைவு தேர்வு மட்டுமே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.