கொரோனா அவசர ஸ்டிக்கர் ஒட்டி வேகமாக வந்த வேன்.. மடக்கிய போலீஸ்.. வேன் முழுவதும் கஞ்சா
புதுச்சேரி: மினிவேனில் கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video
புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறியதால் போலீஸார் அவர்களின் சட்டை பையில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சா பாக்கெட்டுக்களை சட்டை பையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த அன்பரசன் (20), முருங்கப்பாக்கம் குமாரவேலு நகரை சேர்ந்த சிவகாஷ்(21) என்பதும், இவர்கள் நைனார்மண்டபத்தை சேர்ந்த கீர்த்திவாசன் (19), விஜி ஆகியோருடன் சேர்ந்து மினிவேனில் கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து புதுச்சேரியில் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அன்பரசன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 150 கிராம் கொண்ட 52 கஞ்சா பாக்கெட்டை பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேல்ராம்பட்டை சேர்ந்த மினி வேன் ஓட்டுநர் ஜான்பாட்ஷாவையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மினிவேன், இருசக்கர வாகனம், 3 செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்தனர்.