புதுச்சேரியில் மின்கட்டணம் திடீர் உயர்வு.. எவ்வளவு தெரியுமா? நாளை மறுநாள் முதல் அமலாகிறது
புதுச்சேரி: புதுச்சேரியில் வீடுகளுக்கு பயன்படுத்தும் மின்கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டம் ஜுன் 16 (நாளை மறுநாள்) முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி வகித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டணம் என்பது உயர்த்தப்பட்டு வருகிறது.
தற்போது லோக்சபா தேர்தல் நடந்ததால் மின் கட்டணம் உயர்வு என்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் புதுச்சேரியில் மின்கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி வீடுகளுக்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் மக்களுக்கு வழக்கத்தை விட மின்கட்டணத்துக்கு கூடுதல் ரூபாய் செலவாக உள்ளது.
அதாவது புதுச்சேரியில் 50 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் மக்களிடம் யூனிட்டுக்கு ரூ.1.45 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் என்பது ரூ.1.45 என்பதில் இருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.1.95 என்று உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் முதல் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் மக்களிடம் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.25 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் என்பது ரூ.2.70 என்று உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரையிலான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.3.25 என்று இருந்த நிலையில் தற்போது ரூ.4 என்று உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் 201 யூனிட் முதல் 300 யூனிட் வரையிலான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.5.40 ஆக இருந்தது. தற்போது இந்த கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 301 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும்போது ஒரு யூனிட்டுக்கான கட்டணம் ரூ.6.80 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.7.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வர்த்தக பயன்பாட்டில், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான கட்டணம் தற்போது யூனிட்டுக்கு 5.60 ரூபாயில் இருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணமானது ஜுன் 16 (நாளை மறுநாள்)முதல் நடைமுறைக்கு வரும் என புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் புதுச்சேரி மக்கள் அதிருப்தியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications