"புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க நினைச்சேன்.. ஆனா முடியல, ஏன்னா" மத்திய அரசு பக்கம் திரும்பிய ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியை வளர்ந்த ஒரு பிரதேசமாக ஆக்க முயன்றதாகத் தெரிவித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இருப்பினும், அதை தன்னால் செய்ய முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இப்போது ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. என்ஆர் காங்கிரஸ்- பாஜக இடையே சுமுகமான உறவு இருப்பதாகவே இரு தரப்பும் கூறி வருகிறது.
இருப்பினும், திரைமறைவில் இரு தரப்பும் கடும் அதிருப்தியில் உள்ளதாகவே கூறப்படுகிறது. இந்தச் சூழலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி
புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரங்கசாமியின் பேச்சைப் பார்க்கும் போது, அவர் தனது ஆதங்கத்தைக் கொட்டியது போலவே தெரிகிறது. புதுச்சேரியின் வருவாயை அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இதற்காகப் புதுச்சேரியின் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

முடியவில்லை
மத்திய அரசிடம் அடிக்கடி நிதி கேட்கும் சூழல் இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியைச் சிங்கப்பூர் போன்ற ஒரு வளர்ந்த பகுதியாக ஆக்க வேண்டும் என நினைத்ததாகத் தெரிவித்த ரங்கசாமி, இருப்பினும், நிர்வாக சிக்கல்களால் அதை தன்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றும் கவலை தெரிவித்தார். ஒவ்வொரு திட்டத்திற்கும் மத்திய அரசிடம் இருந்து அனுமதி வாங்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வேதனை
மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வாங்க ஏற்படும் காலதாமதம் காரணமாக பல்வேறு திட்டங்கள் புதுச்சேரியில் முடங்கும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தற்போதுள்ள விதிமுறைகள் தொழில்துறையினர் கடினமானதாக உள்ளதாகத் தெரிவித்த அவர், விதிகளைத் தளத்தினால் மட்டுமே புதுச்சேரியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்றார். புதுச்சேரியில் அனைத்திற்கும் விரைவான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தடங்கல்
தான் முதல்வராகப் பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னுமே கூட சில விஷயங்களில் முடிவெடுப்பதில் சில தடங்கல் ஏற்படுவதாகவும் இதனால் வளர்ச்சியும் வருவாயும் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். புதுச்சேரிக்குச் சென்றால் அனுமதி கிடைக்கக் காலதாமதம் ஆகும் என்றே முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். அந்த நிலையில் தான் நாம் உள்ளோம். இதை நாம் மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரியில் பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே அதிருப்தி இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், முதல்வரின் இந்தப் பேச்சு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

அதிருப்தி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் சட்டசபை வளாகத்திலேயே முதல்வருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். அவரை பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரமும் நேரிலேயே சென்று ஆதரவு அளித்தார். அந்தக் கூட்டத்தில் புதுச்சேரிக்கு பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பினார் அங்காளன். இது என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினை சுமுகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.

புதுச்சேரி
தமிழ்நாட்டுடன் புதுச்சேரிக்கும் கடந்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வென்றது. இதையடுத்து 6 இடங்களில் வென்ற பாஜகவுடன் இணைந்து புதுச்சேரியில் கூட்டணி அரசு அமைந்தது. இத்துடன் சுயேச்சையாக வென்ற 3 எம்எல்ஏக்கள் மற்றும் 3 நியமன எம்எல்ஏக்கள் எனச் சேர்த்து பாஜகவுக்கு ஆதரவு புதுவை சட்டசபையில் 12ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications