புதுச்சேரி முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை - 5 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி
புதுச்சேரி எம்எல்ஏக்கள் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட யாருக்குமே கொரோனா தொற்று இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 5 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுச்சேரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வி. பாலன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதியான நிலையில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் மூன்று நாட்கள் ஜெயபால் கலந்து கொண்டதால் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி சட்டசபைக் கூட்டம் வழக்கமாக நடைபெறும் மைய மண்டபத்திலிருந்து தற்காலிகமாக வளாகத்தின் திறந்த வெளியில் நடந்து முடிந்தது. கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதையடுத்து காலவரையின்றி சட்டசபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் கொரோனாவிற்கு மரணம்
சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமை படுத்திக் கொள்ளுமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து கூட்டத்தொடரில் பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் உட்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் எம்எல்ஏக்கள் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.