புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக தவறான முடிவு: காங்கிரஸ் தலைவருக்கு கனவிலும் நினைக்காத தோல்வி
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி பொதுவாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வழக்கம் கொண்டவர். அந்த வகையில் இந்த தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்களம் ஆகிய 2 தொகுதிகளில் ரங்கசாமி களம் கண்டார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் களம் கண்டார். இந்த தவறான முடிவு காரணமாக வாழ்நாளில் சந்திக்காத தோல்வியை தழுவியிருக்கிறார். இந்த முடிவால் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுப் படுதோல்வி அடைந்ததுடன் 'டெபாசிட்' இழந்துள்ளார்.
புதுச்சேரியை பொறுத்தவரை மத்திய அரசின் ஆதரவு உள்ள கட்சிகளே வெற்றி பெறும் என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. எனினும் அதனை ரங்கசாமி உடைத்தார். புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து கட்சி தொடங்கிய 2 மாதத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தவர் ரங்கசாமி. அதன் பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் அவரால் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முதன் முதலாக பாஜக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ரங்கசாமி முதல்வரானார். ரங்கசாமி எப்போதுமே 2 தொகுதிகளில் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டவர் ஆவார். 2021-ம் ஆண்டு தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் தட்டாஞ்சாவடியில் வென்றார். ஏனம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் 2026ல் நடந்த தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்களம் ஆகிய 2 தொகுதிகளில் மீண்டும் ரங்கசாமி களமிறங்கினார். தட்டாஞ்சாவடி தொகுதி அவர், அப்போது மக்களைச் சரியாக சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் வைத்து வந்தது. கடுமையான விமர்சனங்களும் பொதுவெளியில் வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரான வைத்திலிங்கம் எம்.பி., முதல்வர் ரங்கசாமிக்கு எதிராகத் தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கினார். ஆனால், தொகுதி மக்கள் மீண்டும் ரங்கசாமிக்கு மிகப்பெரிய அளவில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்து விட்டனர். இதனால் ஆழம் தெரியாமல் காலைவிட்டதுபோல சிக்கி கொண்டார் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் .. தட்டாஞ்சாவடி தொகுதியில் தோல்வியை தழுவியது மட்டுமல்லாமல், 2-ம் இடம் அல்ல... 3-ம் இடம் அல்ல... 4-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டையே பறிகொடுத்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2 முறை முதல்வராகவும், 7 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2 முறை எம்.பி.யாகவும் இருந்த வைத்திலிங்கம் தன் வாழ்நாளில் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை. அவருக்கு கனவிலும் நினைக்காத அளவிற்கு தோல்வி கிடைத்துள்ளது. அதேநேரம் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி 10,024 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2-வது இடத்தில் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம் 5,583 வாக்குகள் பெற்றார். சுயேச்சை வேட்பாளர் சேது செல்வம் 3,884 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் பெற்றனர். காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் 2,990 வாக்குகள் பெற்று 4-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக தேர்தலுக்கு முன்னர் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரிடையே தொகுதி பங்கீட்டில் பெரும் குழப்பம் நிலவியது. மேலும் காங்கிரஸிலும் உட்கட்சிபூசல் ஏற்பட்டிருந்தது. மூத்த தலைவரான நாராயணசாமிக்கு 'சீட்' கொடுக்காமல் வைத்திலிங்கம் புறக்கணித்திருந்தார். அதன் ஆத்திரத்தால் காங்கிரஸில் ஒரு தரப்பினரும், தி.மு.க.வினரும் வைத்திலிங்கத்திற்கு வாக்களிக்காமல் படுதோல்வி அடையச் செய்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.














Click it and Unblock the Notifications