அதெப்படி திமுகவுக்கு 13 சீட் கொடுக்கலாம்? புதுவை காங்கிரஸில் போர்க்கொடி
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் வெடித்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் களமானது ஒவ்வொரு கட்சிக்கும் ரணகளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. என்.ஆர். காங்கிரஸ்- அதிமுக- பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு 3 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டது.
இதற்கு அதிமுகவில் கடும் அதிருப்தி நிலவுகிறது. புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? என்ற நிலை இருந்தது. பின்னர் இரு கட்சி மேலிடங்களும் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டது. திமுகவுக்கு 13 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் திமுகவுக்கு 13 தொகுதிகளை ஒதுக்கியதற்கு காங்கிரஸில் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அக்கட்சி நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.