"எத்தனை சாமிகள் வந்தாலும், ரங்கசாமி இருப்பது தான் சிறப்பு,.." ஆளுநர் தமிழிசை பன்ச்.. எதற்கு தெரியுமா
புதுவை: புதுச்சேரியில் நடைபெற்ற 55வது கம்பன் விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும், 55வது கம்பன் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
இதில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம், ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் தமிழ் அறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை
விழாவில் கடந்த காலங்களில் உயிரிழந்த கம்பன் கழக தலைவர் மற்றும் நிர்வாகிகள், தமிழ் அறிஞர்கள் புகைப்படங்களை முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர் ஆகியோர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், "புதுவையில் மட்டும்தான். நல்லாட்சிக்கு உதாரணமாக இருந்த தசரதன், ராமன் ஆட்சி நடைபெறுகிறது. அதேபோல புதுவையிலும் நல்லாட்சி நடக்கிறது. புதுவையில் ஓராண்டு ஆட்சி நிறைவடைந்துள்ளது.

தாய்மையான அரசு
கம்பன் கூறியபடி தாய்மையான அரசு இங்கு நடந்து வருகிறது. புதுச்சேரி கம்பன் விழா 55 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திரையரங்கில் 3 நாட்கள், அரங்கு நிறைந்து இருப்பது கடினம். ஆனால் புதுச்சேரி கம்பன் விழாவில் 3 நாட்கள், அரங்கு நிறைந்து காணப்படுகிறது. கம்பன் வரலாறு வெளிநாடுகளுக்கு முழுமையாக செல்லவில்லை. எனவே கம்பனை உலக அரங்கில் கொண்டு சென்று, அரங்கேற்ற வேண்டும்.

ரங்கசாமி
எத்தனை சாமிகள் வந்தாலும், ரங்கசாமி இங்கு இருப்பது தான் சிறப்பு, அண்ணன் ரங்கசாமிக்கு, தம்பி நமச்சிவாயம் உறுதுணையாக இருப்பார். மேலும் வடமொழியை கற்று, வால்மீகியின் வடமொழி ராமாயணத்தை கற்று தமிழர்கள் பெருமைப்படும் வகையில் ராமாயணத்தை கம்பன் படைத்தார். என் தாய்மொழியில் வளம் பெற்றுள்ளேன், பக்கபலமாக மற்றொரு மொழியை கற்கிறேன் என்பதைத்தான் புதிய கல்விக்கொள்கை சொல்கிறது.

ஜிம்பர்
புதுவை அரசுக்கு தமிழ் பற்றைப் பற்றி சொல்லித்தர வேண்டியதில்லை. புதுவையில் தான் தமிழ் விளையாடி கொண்டிருக்கிறது. ஜிப்மரில் பணி புரிபவர்களில் 80 சதவீதத்தினர் இந்தி தெரிந்தவர்கள். அவர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிட்டனர். ஆனால் அதை அரசியலாக்கி பல இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராடுகின்றனர். இது நோயாளிகளுக்கு தொந்தரவாக உள்ளது.

தமிழுக்கு தலைகுனிவு
இதனால்தான் நேரடியாக சென்று ஆய்வுசெய்து தமிழ் புறக்கணிக்கப்படவில்லை என சொன்னேன். இருப்பினும் மறுபடியும் அரசியலாக்குகின்றனர். தமிழுக்கு தலைகுனிவு என்றால் அதை ஒரு போதும் இந்த புதுச்சேரி அரசு ஒத்துக்கொள்ளாது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications