உன்னை போட 1 லட்சம் கொடுத்திருக்கான்.. நீ 2 கொடுத்தா விட்டுர்றேன்.. பதற வைத்த புதுவை படுகொலை
Recommended Video
புதுச்சேரி: காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த முக்கிய குற்றவாளியை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த வழக்கில் மூன்று பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். ஒரு லட்சம் ரூபாய்க்காக சந்திரசேகரை கொலை செய்ததாக ரவுடிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு காலாப்பட்டு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று தனது மாமனார் வீட்டில் பாதுகாப்பாக வசித்து வந்தார்.

இந்நிலையில் சந்திரசேகர் நேற்று கனகசெட்டிகுளம் பகுதியில் துக்க நிகழ்ச்சிக்காக தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பிம்ஸ் மருத்துவமனை சாலையில் வெடிகுண்டு வீசியும், அறிவாளால் வெட்டியும் மனைவியின் கண்முன்னே சந்திரசேகரை படுகொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலை வழக்கு குற்றவாளிகளான புதுச்சேரியை சார்ந்த சுகன், ரங்கராஜ், அப்துல் நசீர் ஆகிய மூன்று பேர் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதி மன்றத்தில் சரணடைந்த மூவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரித்தி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் மூவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சந்திரசேகரை கொலை செய்வதற்காக மறைந்த ஜோசப்பின் ஆதரவாளர்கள் ஒரு லட்சம் தருவதாக ரவுடி சுகனிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ரவுடி சுகன் சந்திரசேகரை நேரில் சந்தித்து, உன்னை கொலை செய்ய ஜோசப் ஆதரவாளர்கள் ஒரு லட்சம் தருவதாக கூறியுள்ளனர்.
நீ இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் உன்னை கொலை செய்ய மாட்டேன். உன்னை வேறு யாரும் கொலை செய்யாதவாறு உனக்கு பாதுகாப்பாகவும் இருப்பேன் என்று மிரட்டியுள்ளார். இதனை சந்திரசேகர் ஏற்க மறுத்து, என்னை பாதுகாத்துகொள்ள எனக்கு தெரியும் எனக்கூறி ரவுடி சுகனை திட்டி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பல நாட்களாக திட்டம் தீட்டி சுகன் மற்றும் அவனது ஆதரவாளர்கள் சந்திரசேகரை கொலை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications