வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்.. பெண் உட்பட 2 வாலிபர்களை சுற்றிவளைத்த போலீஸ்!
புதுச்சேரி: புதுச்சேரியில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சார தொழில் செய்துவந்த, பெண் உட்பட மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடைபெற்று வருகிறது. 1000 ரூபாய் தொடங்கி 25 ஆயிரம் வரை பேக்கேஜ்கள் உள்ளன. விபச்சாரத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வந்தாலும், விபச்சாரம் தங்கு தடையின்றி நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.


இந்நிலையில் புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆண்கள் அதிகளவில் வந்து செல்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இன்று அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரம் நடந்து கொண்டிருந்தது.

இதனையடுத்து வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்துவந்தது காக்கையன்தோப்பை சேர்ந்த மஞ்சுளா, மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த வாலிபர்கள் வினோத்குமார் மற்றும் ஜெகன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வாலிபர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு இளம்பெண்ணை மீட்ட போலீசார், அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் போலீசாரிடம் பிடிபட்ட மஞ்சுளா மற்றும் இரண்டு வாலிபர்கள் மீது விபச்சார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல்துறை தலைமையகத்துக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து மசாஜ் சென்டர்களிலும் சோதனையில் ஈடுபடுமாறு அந்தந்த காவல்நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மசாஜ் சென்டர் என்ற போர்வையில் விபச்சாரம் நடத்தி வருபவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.













Click it and Unblock the Notifications