6 மாத கர்ப்பிணி தற்கொலை.. பயத்தில் தூக்கில் தொங்கிய மாமியார்.. அதிர வைத்த காரணம்.. என்ன நடந்தது?
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மாமியாரும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை காரணமாக கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணத்தை வியாபாரச் சந்தையாக மாற்றும் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளும் இளம்பெண்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மாநிலப் பாகுபாடு ஏதும் இல்லாமல் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்தக் கொடுமை அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், புதுச்சேரியில் வரதட்சணை கொடுமையால் ஒரு குடும்பமே சின்னாபின்னமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதுகுறித்த விவரம் வருமாறு:

காதல் திருமணத்திலும் வரதட்சணை
புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (29). பெயிண்ட்டராக வேலை செய்யும் ஆனந்தராஜும், சீர்காழியைச் சேர்ந்த சந்தியாவும் (25) ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இதுபற்றி இருவரும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்களும் சம்மதித்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது, ஆனந்தராஜின் தாயார் அன்னக்கிளி (70), பெண் வீட்டாரிடம் 20 பவுன் நகை மற்றும் காரை சீர்வரிசையாக கேட்டுள்ளார்.

எதிர்ப்பை மீறி திருமணம் - கொடுமை
இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியாவின் பெற்றோர், இவ்வளவு வரதட்சணையை தர முடியாது எனக் கூறியுள்ளனர். அப்படியென்றால், இந்த திருமணம் நடக்காது என ஆனந்தராஜின் உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால், தனது தாய் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி மாதம் சந்தியாவை ஆனந்தராஜ் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு ஆனந்த ராஜின் தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் சந்தியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளனர். இது, ஆனந்தராஜுக்கு தெரியவரவே, சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றுள்ளார்.

கர்ப்பிணி என்றும் பாராமல்..
இந்த சூழலில், சந்தியா கர்ப்பம் அடைந்தார். இதனிடையே, ஆனந்தராஜின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது சகோதரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆனந்தராஜ் மீண்டும் தனது மனைவியுடன் இங்கு வந்து குடிபெயர்ந்தார்.
பிறகுதான் பிரச்சினையே ஆரம்பித்து இருக்கிறது. ஆனந்தராஜ் வீட்டில் இருக்கும் வரை, சந்தியாவிடம் அன்பாக இருக்கும் மாமியாரும், நாத்தனார்களும், அவர் வெளியே சென்ற பின்னர் தங்கள் சுயரூபத்தை காட்டுவர். கேட்ட வரதட்சணையை கொடுக்காவிட்டால் இங்கு நீ வாழ முடியாது என அவர்கள் மிரட்டியுள்ளனர். பல முறை வரதட்சணை வாங்கி வரக் கூறி சந்தியாவையும் அவர்கள் அடித்தும் இருக்கின்றனர்.

அடுத்தடுத்து தற்கொலை
தொடர்ந்து இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்து வந்த 6 மாத கர்ப்பிணியான சந்தியா, மனமுடைந்து நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த மாமியார் அன்னக்கிளி, போலீஸில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் அவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து இருவரின் சடலங்கையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆனந்தராஜ் மற்றும் அவரது இரண்டு சகோதரிகளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications