புதுச்சேரியில் மருத்துவருக்கும் கொரோனா.. வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்ணுக்கும் பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவர் உட்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவற்றில் 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மேலும் தற்போது ஜிப்மர் மருத்துவர் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 46 ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 24 பேர் குணமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் ஏற்கனவே 37 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஜிப்மர் மருத்துவர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வார்டில் பணிபுரிந்த அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது புதுச்சேரியில் இதுதான் முதல் முறையாகும். அதோடு சோலை நகரில் இரண்டு பேர், அன்னை தெரசா நகர், திலகர் நகர், கொம்பாக்கம், பெரிய கோட்டகுப்பம், வடமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் தவிர மற்றவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள். இவற்றில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4 பேரும், 15 முதல் 25 வயது நிரம்பியவர்கள் 4 பேரும், 37 வயதுடையவர் ஒருவரும் அடங்குவர். தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 46 ஆக உள்ளது.

இவற்றில் 36 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஜிப்மரில் 9 பேரும், சேலத்தில் புதுச்சேரியை சேர்ந்த பெண்மணி ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டாலும் கரோனா இன்னும் பல நாட்கள் இருக்கும் என்பதால் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்வற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். மேலும் ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என மோகன்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications