போர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர் வார முடிவு செய்திருந்த நிலையில், இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் களத்தில் இறங்கி தூர் வாரினர்.
இன்றைய அரசியல் நிலவரம் பற்றியும், தலைவர்கள் குறித்தும் அவ்வப்போது, கருத்து தெரிவித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து 'போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் என்று கூறியிருந்தார்.

இதனால், உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள் சமூக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பஞ்சத்தை போக்க, வீதி, வீதியாக தண்ணீர் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். அதே நேரம், சென்னை மட்டுமின்றி பிற பகுதிகளிலும் மழை நீர் சேமிப்பு, நிலத்தடி நீர் சேமிப்பு, பிளாஸ்டிக் தவிர்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட மூலகுளம் பகுதியில் உள்ள குளத்தை ரஜினி மக்கள் மன்றத்தினர் சுத்தப்படுத்தி தூர் வாரினர். அங்கிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி குளத்தின் கரைகளை பலப்படுத்தினர். மழைக் காலத்திற்கு முன்பாக புதுச்சேரியில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர்வார உள்ளதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னோட்டமாக, களத்தில் இறங்கி பணியாற்றும் ரஜினி ரசிகர்கள், முழுவீச்சில் அரசியலில் குதிக்கும் போது, என்னென்ன செய்வார்களோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications